“பொலிஸார் பௌத்த பீடாதிபதிகளுக்கு அஞ்சி, சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களைத் தடுத்து சட்ட மீறல்களுக்குத் துணை போகின்றனர்” என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிக்குள் இருக்கும் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான “பவானி” வீதியை மீட்பது தொடர்பான வழக்கு விசாரணை, இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் பிரதேச சபை சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
“பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை மீட்டால் சமாதானம் சீர்குலையும் எனப் பொலிஸார் நீதிமன்றத்தில் கூறுகின்றனர். சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயல்வது முற்றிலும் தவறானது. இது ஒரு சிங்கள பௌத்த மேலாதிக்க மனநிலையாகும்” என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
விகாரை தரப்பினர் சட்டவிரோதமாக வீதியை மூடி வைத்துள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய பொலிஸார், பீடாதிபதிகளுக்குப் பயந்து சட்டத்தை மீறுபவர்களைக் காக்க முயல்கின்றனர் என்றும் அவர் சாடினார்.
“சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் சமாதானம் கெடும் என விகாராதிபதி முறைப்பாடு செய்துள்ளார். இங்கே சமாதானத்தைச் சீர்குலைப்பது யார்? நான் தான் சமாதானத்தைச் சீர்குலைப்பேன் என்பது போன்ற தொனியில் இந்த முறைப்பாடு அமைந்துள்ளது. உண்மையில் சட்டத்தை மீறுபவர்களைத் தடுத்து நிறுத்துவதே பொலிஸாரின் கடமை” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தத் தடையாக இருப்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், பொலிஸார் நடுநிலையுடன் செயற்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.










