“தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்த பின்னர் விஜய் இலங்கை வருவார் என நம்புகின்றோம்” என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி. தெரிவித்தார்.
மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்குப் புதிய உறவின் ஊடாகத் தீர்வை வென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஜீவன் தொண்டமான் எம்.பி., இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு:-
“விஜயை இதுவரைகாலம் நடிகராகப் பார்த்த மக்கள் தற்போது தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். மக்கள் வாக்குமூலம் தமிழகத்தில் புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது கச்சத்தீவு குறித்து அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
நான் அமைச்சராக இருந்தபோது அதிக தடவைகள் தமிழ் நாடு சென்றுள்ளேன். அங்கு கச்சத்தீவு என்பது முக்கிய பிரச்சினை கிடையாது. தமிழகத்தில் முகாம்களில் வாழும் நமது சொந்தங்களின் பிரச்சினையே முதன்மையானது. அதேபோல் மீனவர் பிரச்சினையும் தொடர்கின்றது.
தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய ஆட்சியின் கீழ் விஜய் இலங்கை வருவார் என நாம் எதிர்பார்க்கின்றோம். இந்தப் புதிய உறவின் ஊடாக மேற்படி பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என நம்புகின்றோம்.” – என்றார்.










