மன்னார் நகர மீன் விற்பனை நிலையம் உடனடியாக நவீனமயப்படுத்தப்பட்டு மக்கள் கையில் ஒப்படைக்கப்பட வேண்டும் என மன்னார் நரக சபை உறுப்பினர் சோமநாதன் பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று புதன்கிழமை (6) மதியம் மன்னாரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் நகர சபையின் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்த செயல்பாடுகள் இரு மாதங்களில் ஒரு வருடத்தை கடக்கவுள்ளது. இதுவரைக்கும் நாங்கள் நகரசபையால் பிரயோசனமாக மக்களுக்கு என்ன செய்தோம் என்பதில் ஒரு கேள்விக்குறிதான்.
இருந்தாலும் எங்களால் முடிந்தவரை எங்களுடைய வட்டாரங்களுக்கு நாங்கள் செய்திருக்கிறோம். அதேநேரம் இன்றைய ஊடக சந்திப்பின் முக்கிய காரணம் என்னவென்றால், நாங்கள் இதில் ஏழாம் மாதம் 9ஆம் திகதி 2025ஆம் ஆண்டு ஒரு பிரேரணை கொடுத்திருக்கிறோம்.
மீன் சந்தை, மரக்கறி சந்தை புனரமைத்தல் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பராமரிப்பின்றி உள்ள வெற்றிட காணிகளை துப்புரவு செய்யச் சொல்லி ஒரு பிரேரணை கொடுத்திருக்கிறோம்.
இதே மாதிரி ஐந்துக்கும் மேற்பட்ட பிரேரணைகள் கொடுத்திருக்கிறோம். இதுவரைக்கும் எந்த ஒரு பிரேரணையும் சபைக்கு வந்ததும் இல்லை. கருத்தில் கொள்ளப்பட்டதும் இல்லை. நாங்கள் கொடுக்கும் பிரேரணைகள் எல்லாம் குப்பையில் தான் போய்க்கொண்டிருக்கிறது.
போதாக்குறைக்கு இப்போது சபை அமர்வுகளில் கலந்து கொள்ள ஊடகங்களுக்கு அனுமதி இல்லை. நாங்கள் என்ன பேசுகிறோம் என்று மக்களுக்கும் வெளியே தெரிவதில்லை. அதனால் இந்த ஊடக சந்திப்பை வைக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறோம்.
கடைசியாக நடந்த கூட்டத்தில் உங்களுக்குத் தெரியும், அண்மையிலே மீன் விற்பனை நிலையத்தில் மீன் விற்பனை செய்யும் ஒருவர் தங்களுடைய குறைகளை சொல்லியிருந்தார்.
நாங்கள் ஏழாம் மாதம் 2025லேயே இதற்கெல்லாம் கொடுத்தும் இதுவரை நடக்காத காரணத்தால், எங்களிடம் பகிரங்கமாக கடந்த கூட்டத்தில் சபையில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு சவாலாகவோ கோரிக்கையாகவோ இருக்க வேண்டும்.
இந்த மீன் விற்பனை நிலையம் கட்டுவது சம்பந்தமாக மீனவர் சங்கம் அல்லது மீன் வியாபாரிகள் தங்களுக்கு அனுமதி தரவில்லை, முடிந்தால் அனுமதி பெற்றுத் தாருங்கள் என்று எங்களிடம் ஒரு சவால் விட்டிருந்தார்கள்.
நாங்கள் அது சம்பந்தமாக அவர்களோடு பேசிய இடத்தில், ‘நாங்கள் அப்படி ஒன்றும் இல்லை, உடனடியாகத் தருகிறோம்’ என்று சொல்லி இந்த மீனவர் சங்கமும் கடிதம் தந்திருக்கிறது.
அதேநேரம் மீன் விற்பனை நிலையத்தில் மீன் விற்கும் வியாபாரிகளும் கையெழுத்துப் போட்டுத் தந்திருக்கிறார்கள். தங்களுடைய மீன் சந்தையை புனரமைத்துத் தரும்படி. அது எப்படி என்றால், பகுதி பகுதியாக முதலில் பின் பக்கத்தைப் புனரமைத்து அங்கே வியாபாரத்தை தொடர்ந்து விட்டு பிறகு முன் பக்கத்தை செய்யுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.
ஏனென்றால் எங்களுடைய நாட்டில் உள்ள சட்ட திட்டங்கள் உங்களுக்குத் தெரியும். முதலில் எல்லாம் ஆரம்பம் செய்வோம் என்று இடிப்பீர்கள், பிறகு ஒவ்வொரு நிறுவனமாக வந்து அனுமதி தர மாட்டார்கள் என்று அது கிடப்பில் போய்விடும்.
அதனால் பகுதி பகுதியாகப் புனரமைத்துத் தாருங்கள், ஏனென்றால் இது அன்றாடம் மக்கள் பயன்படுத்துகிற ஒரு இடம். வருடா வருடம் இதிலிருந்து 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வருமானங்கள் குத்தகை மூலம் கிடைக்கிறது. அப்படி இருந்தும் எங்களுடைய சொத்தை நாங்கள் தான் பராமரித்துக் கொடுக்க வேண்டும்.
அதற்கான முழு கடிதத்தையும் எடுத்திருக்கிறோம். இன்றே நாங்கள் இதைச் செயலாளரிடம் கொடுக்கிறோம். இதைக் கொடுப்பதற்குக் காரணம் என்னவென்றால் ஏற்கனவே நாங்கள் கொடுத்த பிரேரணைகள் எதுவுமே எடுபடவில்லை. அதேபோல் இந்த விடயத்தையும் குப்பையில் போட்டுவிடக் கூடாது.
இது மன்னார் மக்கள் சார்பாக கொடுக்கிறோம். மன்னார் மக்கள் ஒவ்வொருவரும் இனி கேள்வி கேட்கலாம், தந்த கடிதத்திற்கு என்ன முடிவு? எப்போது புனரமைப்பீர்கள் என்று.
ஏனென்றால் எங்களுடைய நகரசபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட வேலைகள், எங்களால் செய்யக்கூடிய வேலைகளைத்தான் வாக்குறுதியாக மக்களுக்குக் கொடுக்க வேண்டும்.
அண்மைக்காலமாக நகரசபை எங்களுடைய அதிகாரத்திற்கு உட்படாத, நாங்கள் செய்யாத பொய் வாக்குறுதிகளை கொடுத்து சும்மா ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். உடனடியாக குறைந்தது ஒரு மூன்று மாதத்திற்குள் இந்த மீன் மார்க்கெட் நவீனமயப்படுத்தப்பட்டு மக்கள் கையில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
நகரசபையின் போக்குகள் எங்களுக்குத் தெரியும், நாங்கள் என்ன சொல்லியும் எடுபடுவதில்லை. ஒரு குறிப்பிட்ட ஆதரவுக் குழு, அவர்கள் சொல்வது மட்டும்தான் நடக்கும். அதனால் இந்தப் பிரேரணைகளை நாங்கள் கொடுத்தும் பிரயோசனம் இல்லை. சபையில் பேசியும் பிரயோஜனம் இல்லை. அதனால்தான் பகிரங்கமாகத் தருகிறோம். இதன் போது நகர சபை உறுப்பினர் பார்த்திபன் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தார்.










