வட்டாரங்களின் தேவை அறிந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதல்வர் மேற்கொள்கின்ற வேலைத்திட்டங்களை ஆளுநர் தடுக்க முடியும் என்றால் இந்த மாநகரசபை இருக்க வேண்டிய தேவை என்ன என்று வவுனியா மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வர் ப.கார்த்தீபன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வவுனியா மாநகரசபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில், ஓய்வுபெற்ற நீதிபதியின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் பிரதி முதல்வர் ப.கார்த்தீபன் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தேசிய மக்கள் சக்தி அரசின் சர்வாதிகார போக்கின் வெளிப்பாடே வவுனியா மாநகரசபை மீதான நடவடிக்கைகள் என அவதானிக்க முடிகின்றது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு முதல்வரின் நடவடிக்கைகளை ஆளுநரால் கட்டுப்படுத்த முடியும் என்றால் எதற்காக இந்த மாநகரசபைகள் இயங்கவேண்டும் என்று எமக்கு தெரியவில்லை.
மழைக்காலங்களில் திருநாவற்குளம் பகுதியில் வெள்ளநீர் தேங்கி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவது தொடர்பாக ஆளுநருக்கு தெரியுமா? அது ஊர் அறிந்த விடயம். அங்கு வாழ்கின்ற மக்களுக்கே அதன் தார்ப்பரியம் புரியும். எவர் என்ன சொன்னாலும் உண்மை என்னவென்று அந்த கிராம மக்களுக்கு தெரியும்.
சபையை சரியாக வழிநடத்த விடாமல் கூச்சலிட்டு குழப்பம் விளைவிக்கும் அரசுசார்பான உறுப்பினர்கள் அதற்கு துணையாக நிற்கும் அடிவருடிகள் இருக்கும் வரை யாராலும் இந்த சபையை நடாத்த முடியாது.
எனவே முதல்வர் தன்னிச்சையாக ஆளும் தரப்பு உறுப்பினர்களின் அனுமதியுடன் சில வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருந்தார். அதுவே உண்மை.
அத்துடன் பொலிஸ் நிலையம் முன்பாக இருக்கும் அங்காடி விற்பனை பகுதியில் ஏற்கனவே அங்காடி கடைகள் தான் இயங்கி வந்தது. அப்போதெல்லாம் இவர்களது கண்களுக்கு அது தெரியவில்லையா? வீதியில் இருந்தவர்களை கொண்டு வந்து தற்காலிகமாக நாம் அங்கு அமர்த்தியதும் தான் இவர்களுக்கு பிரச்சினையாக உள்ளத., அப்படியானால் அவர்களை மீண்டும் வீதியிலா விடுவது.
வவுனியா வரலாற்றில் இதுவரை யாரும் காணாத விடயம் ஒரு உள்ளூராட்சி சபையையே நடாத்த விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். இதன் பின்னணியில் சட்டவிரோதமாக கள்ளமாடு வியாபரம் செய்பவர்களும், NPP அரசின் சர்வாதிகார போக்குமே அதனை செய்தது.
இலங்கையில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தமது கைகளுக்குள் இருக்க வேண்டும் என்ற நோக்கமே வவுனியா மாநகரசபையை தொடர்ந்தும் முடக்கி வைத்திருப்பதற்கான காரணம். பதவி மோகமும் பணத்தின் மோகமும் உடைய கயவர்களின் இச்சைகளை அறிந்த நரிக்கூட்டம் அவர்களை பயன்படுத்தி சபையை முடக்கினர் என்பதுவே உண்மை. என்று தெரிவித்தார்.










