வவுனியா மாநகர சபையின் அனுமதியின்றி அரச நிலத்தில் அமைக்கப்படும் வர்த்தக நிலையம் தொடர்பில் மாநகரசபை நிர்வாகம் அசமந்தப் போக்குடன் செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வவுனியா நகரப் பகுதியில் உள்ள அரச காணியில் முறையான அனுமதியின்றி சிறிதாக அமைக்கப்பட்டிருந்த வர்த்தக நிலையம் ஒன்றை பெரிதாக கட்டும் நடவடிக்கை கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா மாநகர சபை செயலாளருக்கு பலரும் முறைப்பாடு செய்தும் அவர் உரிய வகையில் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வவுனியா மாநகர சபையின் மேயர், பிரதி மேயர் மற்றும் சபை நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செயலாளரிடம் தெரியப்படுத்தி இருந்ததுடன், சம்பவ இடத்திற்கு சென்று நேற்று (09.11) அதனை தடுத்து நிறுத்தியிருந்தனர்.
மீண்டும் இன்றைய தினம் (10.11) அதன் கட்டுமான நடவடிக்கைகள் இடம்பெற்ற நிலையில் எதிர்கட்சி உறுப்பிர்களின் அழுத்தத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.
அத்துடன், அனுமதியின்றி மாநரசபை கட்டளையை மீறி கட்டப்பட்ட பகுதியை உடனடியாக அகற்றுமாறு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வவுனியா மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோர் மாநகர சபை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கிய போதும், நிர்வாகம் அதனை செயற்படுத்தாது அசமந்தப் போக்குடன் செயற்படுவதாக சபையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த சட்டவிரோத கட்டுமானத்தை அகற்ற மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் வாகனங்கள் சென்ற போதும் மாநகர சபை உயர் அதிகாரிகள் அதனை சட்ட திட்டங்களுக்கு அமைவாக மேற்கொள்ள தவறியமையால் அவை அகற்றப்படாமல் மாநரசபை உத்தியோகத்தர்களும், வாகனமும் திரும்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.














