நோயாளர் காவுவண்டிக்கான நிரந்தர சாரதியை நியமிக்குமாறு கோரி போராட்டம் ஒன்று ஐயன்கன்குளம் கிராம மக்களால் இன்றையதினம் (19.03.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஐயன்கன்குளம் பகுதியில் உள்ள ஐயன்கன்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் நிரந்தர சாரதி இல்லாமையால் குறித்த கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். எனவே அதற்கு தீர்வினை பெற்று தருமாறு இன்றையதினம் (19) காலை ஐயன்கன்குளம் வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த அடிப்படை வசதிகள் குறைந்த கிராமத்தில் இருக்கும் மக்களுக்களுக்கான ஐயன்கன்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் அவசர நோய் நிலைகளுக்கு போனால் உடனடியாக மல்லாவி வைத்தியசாலை கொண்டு செல்லக்கூடிய வகையில் நோயாளர் காவுவண்டிக்குரிய சாரதி நிரந்தரமாக அங்கே பணியாற்றுவதில்லை எனவும்,
நோயாளர்காவு வண்டி இருக்கின்ற போதும் சாரதி சரியாக பணிக்கு இல்லாத காரணத்தினால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் , குறித்த சாரதி தான் நினைத்த பாட்டிலே லீவுகளை பெற்றுக் கொள்வதாகவும் தன்னை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு இவ்வாறு செய்வதாகவும் கூறி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
எனவே உரிய வகையிலே குறித்த நோயாளர்காவு வண்டி சாரதியை நிரந்தரமாக நியமித்து அடிப்படை வசதிகள் குறைந்த கிராமத்திலே நோய்வாய்ப்படுகின்ற மக்களுக்கான உரிய சேவையை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்ததோடு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வடக்கு மாகாண ஆளுநருக்கான ஒரு மகஜரை குறித்த வைத்தியசாலையின் வைத்தியரிடமும் ஐயன்கன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களிடமும் கையளித்திருந்தமை குறிப்பிடதக்கது.


