நாட்டில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு இப்போதாவது நியாயத்தைப் பெற்றுக் கொடுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அநுர அரசிடம் வலியுறுத்தினார்.
நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பி உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“வேலையில்லாப் பிரச்சினைக்கும், கல்வி முறைக்கும் இடையே நிலவும் பொருத்தமற்ற சுழற்சி இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினையாகவே அமைந்து காணப்படுகின்றன. அரசியலில் கைக்கூலிகளாக மட்டுமே இருக்கும் வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினை மீண்டும் பிரதான பேசு பொருளாக மாறியுள்ள பின்னணியில், நான் பின்வரும் கேள்விகளைக் கேட்கின்றேன். சரியான பதில்களையும் விளக்கங்களையும் அரசிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன்.
- இலவசக் கல்வியின் கீழ் ஆரம்ப, இடைநிலை மற்றும் உயர் நிலை என ஒவ்வொரு நிலைக்கும், ஒரு மாணவருக்கு அரசு ஆண்டுக்கு எவ்வளவு தொகையைச் செலவழிக்கின்றது? இது தொடர்பாக அரசு அங்கீகரிக்கப்பட்ட ஆய்வேதையும் மேற்கொண்டுள்ளதா?
- உயர் தரத்தில் கலை, வணிகம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் பயிலும் மாணவர்கள், தங்கள் பட்டப்படிப்பு முடிவடையும் திகதியிலிருந்து வேலை கிட்டும் வரை எடுக்கும் காலம் தொடர்பில் அரசு முன்னெடுத்த ஏதேனும் ஆய்வுகள் உண்டா? அவ்வாறானால், எடுக்கும் காலத்தை தனித்தனியாக குறிப்பிடவும்?
மேலும், இதுவரை 580 சுதேச மருத்துவ பட்டதாரிகள் தங்கள் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளனர். இவர்களுக்குத் தொழில் பயிற்சி வழங்க அரசு இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. இவர்களுக்குரிய தொழில் பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வேலையற்ற பட்டதாரிகள் எத்தனை பேர் உள்ளனர்? இந்தப் பட்டதாரிகளில் வெளிவாரி, உள்வாரி, திறந்த மற்றும் தனியார் பல்கலைக்கழக பட்டதாரிகள் எத்தனை பேர் உள்ளனர்? பட்டதாரிகளின் எண்ணிக்கையை அவர்கள் பெற்ற பட்டப்படிப்புக்கு ஏற்ப தனித்தனியாக முன்வைக்க முடியுமா? தொழில் சந்தையில் நுழைய முடியாமல் எந்த அடிப்படையில் அவர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள்? இது குறித்து அரசாங்கம் மேற்கொண்ட ஆய்வுகள் என்ன? அவற்றை சபையில் முன்வைப்பீரா?
- தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 72 ஆவது பக்கத்தில் வேலையில்லா பட்டதாரிகள் 35 ஆயிரம் பேருக்கு முறையான ஒழுங்கின் கீழ் துரிதமாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், எத்தனை பட்டதாரிகளை இந்த ஆண்டு சேர்த்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது? இவை எந்தெந்த துறைகளுக்கு? இந்த ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் இதற்காக எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது? வேலை தேவைப்பாட்டின் அடிப்படையில், அரசு அவர்களை ஏதாவது தகுதி அடிப்படையிலா இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கின்றது? இல்லையென்றால், ஏதேனும் போட்டிப் பரீட்சை மூலமாகவா?
- கலைப் பட்டதாரிகளில் பெரும்பாலானோர் பட்டப்படிப்புக்குப் பிறகு வேலை தேடும் நெருக்கடியில் இருந்து வருவதால், இந்த நிலையை முடிவுக்கு கொண்டு வர இதுவரையில் அரசு முன்வைத்துள்ள கல்விச் சீர்திருத்த முன்மொழிவுகள் யாவை?
தற்போதைய அரசு வாக்குறுதியளித்தபடி, இந்தப் பட்டதாரிகளுக்கு 45 வயது வரம்பைப் பொருட்படுத்தாமல் போட்டிப் பரீட்சைகளில் தோற்றுவதற்கு அனுமதியளிக்க வேண்டும். இந்த வேலையில்லாப் பட்டதாரிகளைத் தொடர்பு கொண்டு, அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குங்கள்.” – என்றார்.
வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் அரசிடம் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பிய சந்தர்ப்பத்தில், இதற்கான பதிலை பின்னர் முன்வைப்பதாக ஆளுந்தரப்பினர் தெரிவித்தனர்.
“இதற்குப் பதில் வழங்க அரசு கால அவகாசம் கேட்பது நியாயமற்றது. ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவு – செலவுத் திட்ட உரையில் இந்த 35 ஆயிரம் பேருக்குமான பதில்கள் இருக்க வேண்டும். இதற்குப் பதிலளிக்க அரசு கால அவகாசம் கேட்டதன் மூலம், இந்தப் பிரச்சினைக்கு பதில் அளிக்காமல் அரசு வேண்டுமென்றே புறக்கணிப்பதாகவே தோன்றுகின்றது.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.