பாதாள உலகக் குழுத் தலைவர் ‘ஹரக் கட்டா’வின் தரப்பிடமிருந்து 1200 இலட்சம் (12 கோடி) ரூபா இலஞ்சத்தைப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் புதல்வர் சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரையும், வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான ‘ஹரக் கட்டா’ எனப்படும் நதூன் சிந்தக்கவை சட்டப் பாதுகாப்புக்குள் கொண்டு வருவதற்காக, அவரது மனைவியிடமிருந்து 1200 இலட்சம் ரூபாவை முற்பணமாக இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக்குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நீதி அமைச்சரின் புதல்வர் சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சரித அபேசிங்க மற்றும் சிவில் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அருண ஸ்ரீ சத்துரங்க ஆகிய மூவரும் விளக்கமறியல் காலம் நிறைவடைந்த நிலையில், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
மேற்படி சந்தேகநபர்கள் மூவரும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










