சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (ஜீ.எம்.எம்.எஸ்) தரம் 1 இல் கல்வி பயிலும் மாணவர்கள் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலைப் பார்வையிட இன்று வியாழக்கிழமை கள விஜயம் மேற்கொண்டனர்.
இந்தக் கள விஜயத்தில், இந்த வருடம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு அமைவாக, இஸ்லாம் பாடத்தில் உள்ள அல் – மஸ்ஜித் எனும் பாடத்தை கருப்பொருளாக கொண்டு தரம் 1 இல் கல்வி பயில்கின்ற சுமார் 200 மாணவ, மாணவிகள் பாடசாலையில் இருந்து நடந்து சென்று பார்வையிட்டனர்.
சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலினை ஆர்வத்துடன் பார்வையிட வந்த மாணவர்கள், தொழுமிடம், மிம்பர் மேடை, அதான் சொல்லுமிடம், வுழு செய்யுமிடம் போன்ற இடங்களும் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டு, சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாரக் அவர்களினால்
போதிய விளக்கங்களும் கொடுக்கப்பட்டன.
இந்த விஜயத்தில் அதிபர் எம்.ஐ.எம் இல்யாஸ் உட்பட ஆசிரியர் எம்.ஏ.எம். அஸ்மி, ஆசிரியைகளான ஏ.எம். கிதாபியா, என். றிஸ்வானா பர்வின், எஸ்.எல். பஸ்மினா, ஏ.எப். பர்வின், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஐ. அஸ்லம் சுஜா மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.எப்.நஜீபா, எம்.எல். றிஸ்மியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு மிகப் பிரயோசனமான விளக்கங்கள் இதன்போது வழங்கப்பட்டதாகவும் மாணவர்களுக்கு மிக இலகுவாகப் புரியும் வண்ணம் விளக்கங்களை வழங்கி, முன்மாதிரியான செயற்பாட்டை மேற்கொண்ட பள்ளிவாசலின் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம் முபாரக் உட்பட அதன் நிர்வாகத்தினருக்கு அதிபர், ஆசிரியர்கள் உட்பட பாடசாலை சமூகம் தமது விசேடமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
இறுதியாக பள்ளிவாசல் தலைவரினால் இனிப்புப் பண்டங்கள் வழங்கியதோடு மட்டுமல்லாமல், மாணவர்களின் நினைவாக ஒவ்வொரு வகுப்பாக குழுவாக நின்று புகைப்படம் எடுத்து அதனை உடனே பிரிண்ட் செய்து அந்தந்த வகுப்பாசிரியரிடம் கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.













