கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி வண்ணாங்கேணி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அமைதி வழியில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் குடும்பஸ்தர் முன்வைத்துள்ள ஐந்து அம்சக் கோரிக்கைகள் பின்வருமாறு:
கோரிக்கை 01: விவசாயத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியைப் பிரிவு செய்து, எஞ்சிய நிலத்தில் இயற்கை எருக்களைப் (சாணம்) பயன்படுத்தி விவசாயம் செய்வதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
கோரிக்கை 02: இப்பகுதியில் பின்தங்கிய சொத்தாகக் காணப்படும் 500 ஏக்கர் காட்டு நிலத்தில், 50 ஏக்கர் காணியை முதலீட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்க வேண்டும். அத்துடன், எமது கிராம மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்காகப் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் பதிவு செய்துள்ள மக்களுக்கு அதனை எவ்வித பாகுபாடுமின்றிப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
கோரிக்கை 03: எமது கிராமத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பல்வேறு வழிகளிலும் முட்டுக்கட்டையாக இருப்பதுடன், விவசாயத்தை வளர்க்க விடமாட்டோம் எனக் கூறும் எமது கிராம உத்தியோகத்தரை (கிராம சேவையாளர்) உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.
கோரிக்கை 04: போதைப்பொருள் பாவனையற்ற, ஒரு அழகான விவசாயக் கிராமத்தை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
கோரிக்கை 05: அரசாங்கத்தினால் எமக்காக அமைக்கப்பட்டு வரும் சமூகக் கட்டமைப்பு முறையான பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட வேண்டும். அத்தோடு, அரசு ஊழியர்கள் சிலர் மேற்கொள்ளும் சாதிவாதம், மொழிவாதம் மற்றும் இனவாதம் போன்ற பாகுபாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இன்றைய தினம் காலை 8:00 மணியளவில், ஒரு துளி நீர் கூட அருந்தாமல் குறித்த குடும்பஸ்தர் தனது சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
இவ்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அப்பகுதி ஊர் மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்து தங்களது ஆதரவை வழங்கி வருகின்றனர்.










