யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின் போது புதிதாக 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதையடுத்து செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 26ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.
நேற்றைய அகழ்வின் போது புதிதாக சிறுவர்களின் மூன்று எலும்புக்கூடுகள் உட்பட 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன.
அத்துடன் நேற்று மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத்தளம் ஒன்று மற்றும் இரண்டிலிருந்தும் மொத்தமாக இதுவரை 366 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 357 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
நேற்று இடம்பெற்ற அகழ்வின் போது செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து 347 என இலக்கமிடப்பட்ட எலும்புக்கூட்டின் இடுப்புப் பகுதியில் இருந்து இரண்டு நாணயக் குற்றிகள் ஒன்றோடு ஒன்று ஒட்டியவாறு அடையாளம் காணப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு 119ஆவது சான்றுப்பொருளாக இலக்கமிடப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது.














