“நாட்டின் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் மற்றும் திட்டமிடல் இல்லாத பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, இந்த நிர்வாகத்தால் நாட்டை ஒருபோதும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்பதை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இப்போது மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர்” என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் அழைப்பாளர் நளின் பத்திரண தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் நாட்டின் மோசமடைந்து வரும் பொருளாதார நிலை குறித்து ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நடந்து முடிந்த தேர்தல்கள் மூலம் இந்த அரசாங்கத்திற்குப் பாரிய எதிர்பார்ப்புகளுடன் வாக்களித்த எமது நாட்டு மக்களுக்கே, தற்போதைய சூழலில் இவர்களின் நிர்வாக இயலாமை மற்றும் வெறும் மேடை வாய்ச் சவடால்கள் குறித்து நன்கு தெரியவந்துள்ளது. அரசாங்கம் நாளுக்கு நாள் சந்தித்து வரும் தனது தொடர்ச்சியான தோல்விகளை, மேலும் மேலும் புதிய பொய்களைக் கூறி மக்கள் மத்தியில் மூடிமறைக்க இனிமேலும் முயலக் கூடாது.
பொதுமக்கள் தங்களின் வாழ்வாதார நெருக்கடி தாளாது மீண்டும் பெருமளவில் வீதிக்கு இறங்கி, அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து அடித்து விரட்டும் வரை அல்லது ஆட்சியாளர்கள் மக்கள் பயத்தில் ஒளிந்து கொள்ளும் இருண்ட நிலை ஏற்படும் வரை காத்திருக்கக் கூடாது. அவ்வாறானதொரு அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னர், நாட்டைச் சரியான பொருளாதாரப் பாதையில் நிர்வகிக்கக் கூடிய உண்மையான தகுதியும் ஆளுமையும் கொண்ட ஒருவரிடம் இந்த நாட்டை வழிநடத்தும் பொறுப்பை அரசாங்கம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.
எமது சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, இந்த நாட்டை இப்போதே பொறுப்பேற்று மிகவும் வெற்றிகரமான பாதையில் வழிநடத்துவதற்குத் தயாராக இருக்கின்றார். கடுமையான பொருளாதாரச் சரிவினால் வீழ்ந்து கிடக்கும் நாட்டை மீண்டும் மிக விரைவாக இயல்பு நிலைக்குக் கொண்டுவரக் கூடிய உன்னத ஆற்றலும், தொழில்சார் வியூகங்களும் அவரிடம் மட்டுமே உண்டு என்பதை நாம் உறுதியாகக் கூறிக்கொள்கின்றோம்.
எனவே, அரசாங்கம் தங்களின் பிடிவாதப் போக்கினால் மேலும் காலத்தைக் கடத்தாமல், நாட்டை ஆளத் தகுதியான வல்லுநர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்க முன்வர வேண்டும். நாளுக்கு நாள் மக்களை மேலும் வறுமை மற்றும் தீராத துன்பப் படுகுழியில் தள்ளும் இந்த மோசமான செயல்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தை நாம் வன்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.









