முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து வட மத்திய மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கவுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களை ஐக்கிய மக்கள் சக்தி திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, ஐக்கிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சனுக்கு நெருக்கமானவர் என்றும், அவரின் ஊடாக வட மத்திய மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார் என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன.
இந்நிலையில், இவ்விடயம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சனிடம் ஊடகங்கள் வினவியபோது அவர் அதனை மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“சவேந்திர சில்வா என்பவர் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய ஒரு சிறந்த இராணுவ வீரர். அவர் அரசியல் ரீதியாக அப்படியானதொரு முடிவை எடுக்க மாட்டார். அரசியல் தொடர்பாகப் பேசுவதற்குக் கூட அவர் விரும்புவதில்லை.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நான் அவருடன் எவ்வித கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவில்லை. அவ்வாறு நான் அவரிடம் பேசியிருந்தால்கூட, அவர் என்னைத் திட்டியிருப்பார். எனவே, சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இத்தகவல்கள் முற்றிலும் போலியானவை ஆகும்.
கட்சி மட்டத்திலும் இது குறித்து எவ்வித கலந்துரையாடல்களும் நடத்தப்படவில்லை. சவேந்திர சில்வாவை அரசியலுக்குக் கொண்டுவருவதற்கு நான் முயற்சிப்பதாகக் கூறப்படும் தகவல்களும் தவறானவை. தற்போதைய ஆளுங்கட்சியின் ‘சலவை இயந்திரங்களே’ திட்டமிட்ட அடிப்படையில் இப்படியான அபாண்டமான வதந்திகளைப் பரப்பி வருகின்றன.” – என்றார்.









