இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், அவசர சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக நிதியுதவி கோரியிருந்த சிவாஜிலிங்கம் அவர்களுக்கு, யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனை செல்வா விளையாட்டு கழகத்தினர் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
அண்மையில் தனது மருத்துவத் தேவையை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்திய சிவாஜிலிங்கம் அவர்களுக்கு, பல்வேறு தரப்பினரும் தம்மாலான உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, குடத்தனை செல்வா விளையாட்டு கழகத்தினர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் பங்களிப்புடன் கணிசமான நிதி ஒன்றினைத் திரட்டியிருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் செல்வா விளையாட்டு கழகத்தின் உறுப்பினர்கள் நேரில் சென்று சிவாஜிலிங்கம் அவர்களிடம் உதவித் தொகையை உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.
ஒரு சக மனிதனின் உயிர் காக்கும் உயரிய நோக்குடன், உள்நாட்டு வெளிநாட்டு உறவுகளை ஒன்றிணைத்து குடத்தனை செல்வா விளையாட்டு கழகத்தினர் முன்னெடுத்த இந்த அறப்பணி, தமிழ் பேசும் மக்களிடையே நெகிழ்ச்சியையும் பலத்த வரவேற்பையும் பெற்றுள்ளது.
இவ்வுதவி சிவாஜிலிங்கம் அவர்களின் மருத்துவச் சிகிச்சைக்குப் பெரும் பக்கபலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது










