போலந்திற்கு அமெரிக்கா மேலதிகமாக 5,000 படையினரை அனுப்பும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத் தளத்தில் இது குறித்து பதிவிட்ட ட்ரம்ப்,
கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தான் ஆதரித்த போலந்து ஜனாதிபதி கரோல் நவ்ரோக்கியுடனான அமெரிக்காவின் உறவின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார்.
மேலதிக படையினர், முன்னர் திட்டமிடப்பட்ட படையணியின் ஒரு பகுதியா அல்லது வேறு ஒரு நடவடிக்கையா என்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி மேலதிக விவரங்களை அளிக்கவில்லை.
தனது ‘அமெரிக்கா முதலில்’ என்ற செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐரோப்பாவில் உள்ள தனது ஒட்டுமொத்தப் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்க உத்தேசித்துள்ளதாக வெள்ளை மாளிகை அண்மைய வாரங்களில் சமிக்ஞை செய்துள்ளது.
மேலும், ஈரானுடனான போர் தொடர்பாக ட்ரம்பிற்கும் ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, இந்த மாதத் தொடக்கத்தில், ஜெர்மனியிலிருந்து 5,000 படையினரைத் திரும்பப் பெறப்போவதாகவும் அமெரிக்கா அறிவித்தது.
ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்களால் அமெரிக்கா அவமானப்படுத்தப்பட்டது என்ற மெர்ஸின் கருத்தை ட்ரம்ப் முன்னதாக விமர்சித்திருந்தார்.
போலந்திற்கான கூடுதல் வீரர்களை, ஜெர்மனியிலிருந்து திரும்பப் பெறப்பட்ட படைகளின் ஒரு பகுதியா அல்லது ஒரு தனிப்பட்ட குழுவா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரானுக்கு அழுத்தம் கொடுப்பதில் அமெரிக்காவுடன் சேர விருப்பமில்லாத வொஷிங்டனின் நேட்டோ பங்காளிகளையும் அவர் விமர்சித்து வருகிறார்.










