உடனடிப் பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த தம்பதியினரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நீண்டகால விசாரணைகளின் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை (20) அத்துருகிரிய பகுதியில் வைத்து இந்த தம்பதியினர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பொரளை, பேஸ்லைன் வீதியிலுள்ள ‘சிறிசர உயன’ பகுதியில் வசித்து வந்த 32 வயதுடைய மனைவி மற்றும் 37 வயதுடைய கணவன் ஆவார்.
பொரளை, பேஸ்லைன் வீதி, சிறிசர உயன என்ற முகவரியில் வசிக்கும் இந்த தம்பதியினர் 2017ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இதன் மூலம் கிடைத்த பணத்தை பெண் சந்தேகநபரின் தாயாரின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டுள்ளதாகவும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
அத்துடன், பெண் சந்தேகநபர் சட்டவிரோதமாக உழைத்த பணத்தைப் பயன்படுத்தி அத்துருகிரிய, கொரதொட்ட, 08 ஆவது குறுகிய வீதியில் அமைந்துள்ள 06 பேர்ச் காணியையும் அதில் கட்டப்பட்டுள்ள வீட்டையும் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுமார் 300 இலட்சம் ரூபாய் பணத்திற்கு வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின்படி, இந்த சந்தேக நபர்களால் வாங்கப்பட்ட வீடு உள்ள நிலத்தை நேற்று (20) முதல் 7 நாட்களுக்கு செயலிழக்கச் செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் ஆண் மற்றும் பெண் சந்தேகநபர்களினதும், பெண் சந்தேகநபரின் தாயாரினதும் பெயரிலுள்ள 06 வங்கிக் கணக்குகள் தொடர்பிலும், ஆண் சந்தேகநபரின் பெயரில் வாங்கப்பட்டுள்ள சொகுசு கார் ஒன்று தொடர்பிலும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.










