இலங்கையின் பல பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கோர வாகன விபத்துகளில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கேகாலையின் ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெத்தாவல பகுதியில் இருந்து வஹரக நோக்கிய உப வீதியில், செலுத்தப்பட்ட டிரக்டர் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சாரதி, கோனகல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் வஹரக பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இதேபோன்று கம்பகா பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டி சந்தி ஊடாக, சென்ற லொறியொன்று, அதே திசையில் பயணித்த சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த சைக்கிள் ஓட்டி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் களனி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அத்துடன் ஹம்பாந்தோட்டை தங்கல்ல – வீரகெட்டிய வீதியின் வல்கம் எலிய பகுதியில் செலுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளொன்று, அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் படுகாயமடைந்த சாரதி தங்கல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் தங்கல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
மேலும், புத்தளம் மதுரங்குளிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடயாமட்ட – உடப்புவ வீதியின் சமீரகம பகுதியில், சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, தனக்கு முன்னால் சென்ற லொறியை முந்திச் செல்ல முயன்றுள்ளது.
இதன்போது, எதிர்த்திசையில் வந்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி, கொத்தாந்தீவு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கொத்தாந்தீவு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவராவார்.
விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ் அனைத்து விபத்துகள் தொடர்பிலும் அந்தந்தப் பகுதிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










