ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை வழங்குவதற்காகக் கூலிக்கு ஆட்களை அமர்த்திய குற்றச்சாட்டில் 74 வயதுடைய தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.
விமானக் கொள்வனவின் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட கபில சந்திரசேன, கடந்த 5ஆம் திகதி நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார். 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணைகள் அவருக்கு நிபந்தனையாக விதிக்கப்பட்டிருந்தன.
கபில சந்திரசேன விடுதலையான பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
100 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளுக்காக, தலா 15 ஆயிரம் ரூபா பணம் வழங்கப்பட்டு இருவர் பிணையாளர்களாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கூலிக்கு ஆட்களை அமர்த்திய தரகர் நீண்டகாலமாக நீதிமன்ற வளாகங்களில் இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிணைக்காக முன்னிலைப்படுத்தப்பட்ட அந்த இரு சந்தேகநபர்களும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் வசிக்கும் 74 வயதுடைய மேற்படி தரகரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










