நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13) புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் புத்தளம், காலி, மாத்தறை மாவட்டங்களுக்கும் ‘அம்பர்’ நிறத்திலான கடும் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மிகக் கடும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும்.
கடும் மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.










