ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான மரண விசாரணை, கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேகர முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணையின் புதிய முன்னேற்றங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
மறைந்த கபில சந்திரசேனவின் கையடக்கத் தொலைபேசியை இதுவரை அணுக முடியவில்லை என்று பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். குறித்த தொலைபேசி ‘பேஸ் ஐடி’ மூலம் பூட்டப்பட்டுள்ளதால், அதனைத் திறக்கத் தயாரிப்பு நிறுவனம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்க அனுமதி கோரப்பட்டது. இதற்கு நீதவான் அனுமதி வழங்கினார்.
கபில சந்திரசேனவின் உடலில் இருந்து பெறப்பட்ட இரண்டு இரத்த மாதிரிகளை மேலதிக ஆய்வுக்காக அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்ப அனுமதி வழங்கப்பட்டது.
சம்பவம் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு ‘நெக் டை’ மற்றும் சில மருந்துகள், அடையாளம் தெரியாத பொருட்கள் ஆகியவற்றை இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த மரணம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவியிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையின் மேலதிக முன்னேற்ற அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக, வழக்கை நாளை வியாழக்கிழமை வரை நீதிவான் ஒத்திவைத்தார்.










