நீதிமன்றங்கள் தீர்ப்பளிப்பதற்கு முன்னரே அமைச்சர்கள் தீர்ப்புகளைக் கூறுவது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும், இதற்காக ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் அனைவரும் நீதிபதிகள் முன்னிலையில் மன்னிப்புக்கோர வேண்டும் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் பணி நீக்கப்பட்ட மேலதிக பணிப்பாளர் உயிரிழந்துள்ளமை தற்கொலை எனக் குறிப்பிடப்படுகின்றது.
அரசின் தவறான தீர்மானங்களினால் அரச உத்தியோகத்தர்களே பலியாகின்றார்கள். ஆனால் தீர்மானம் எடுத்த அமைச்சரவை உறுப்பினர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த மோசடி விவகாரத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பற்றி ஆளும் தரப்போ அல்லது ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட எதிர்க்கட்சியினரோ பேசுவதில்லை.
கடந்த ஆண்டு செப்டெம்பர் முதல் டிசெம்பர் வரையான காலப்பகுதியில் வெளிநாட்டு கடன்களை செலுத்தும் அதிகாரம் இலங்கை மத்திய வங்கியின் வசமே காணப்பட்டது. இந்தக் காலப் பகுதியில் மத்திய வங்கி ஆளுநரின் அனுமதியுடன்தான் ஆஸ்ரேலிய நிறுவனத்துக்குக் கட்டம் கட்டமாக 7 கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளன.
2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவையும் விசாரிக்க வேண்டும். அவருக்கு மாத்திரம் ஏன் சிறப்பு சலுகை வழங்கப்படுகின்றது.?
எனவே, இந்த 2.5 மில்லியன் டொலர் மோசடி விவகாரத்தில் மத்திய வங்கியின் ஆளுநரையும் விசாரிக்க வேண்டும்.
மே தினக் கூட்டத்தில் அரசியல் எதிராளிகளை இந்த ஆண்டு சிறைக்கு அனுப்புவதாக ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் குறிப்பிட்டதன் மூலம் அரசின் வன்மம் வெளிப்பட்டுள்ளது.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க தன்னைச் சிறைக்கு அனுப்புவதாகக் கூறுகின்றார். நீதிமன்ற விசாரணைக்கு முன்னரே இவ்வாறு தீர்ப்புக் கூறுவதற்கு அவர் ஒன்றும் நீதிபதி அல்ல.
நீதிமன்றங்களை அவமதிக்கும் வகையில் செயற்படும் அரச தரப்பினர், நீதித்துறைக்கு முன்னால் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்க வேண்டும்.” – என்றார்.










