நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று (02) சனிக்கிழமை போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னிபிட்டிய பகுதியில் ஹெரோயின், ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பன்னிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 28 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சனிக்கிழமை காலை இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 120 கிராம் ஹெரோயின், 248 கிராம் ஐஸ் போதைப்பொருள், 360 கிராம் குஷ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொழும்பு – மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ‘சியசெத செவண’ வீட்டுத் தொகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
மருதானை பொலிஸாரால் சனிக்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 82 கிராம் 420 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 15,090 ரூபாய் பணமும் தொலைபேசி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










