மனித வாழ்வுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய திருச்சபைகளிலும், திருச்சபை கண்காணிப்பிலும் உள்ள பாடசாலைகளிலும் ஊழல்கள் அதிகரித்துள்ள நிலையில் தினகரனுக்கு தினமும் முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் உள்ளது.
யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியின் ஆசிரியர் மன்றத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி (26.03.2026) நடைபெற்றது.
இதன்போது கல்லூரி அதிபர் திரு V.S.B. துசீதரன் அவர்களின் செயற்பாடு தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. ஏறத்தாழ மதியம் 2.00 மணியளவில் ஆரம்பித்த இக்கூட்டமானது அதிபரின் அனாவசிய தலையீடு காரணமாக மாலை 5.30 மணிவரை நீடித்தமை குறிப்பிடத்தக்கது.
செயலாளரின் முன்னைய வருடாந்த பொதுக் கூட்ட அறிக்கை வாசித்து நிறைவடைந்த நிலையில் அதிபர் பின்வரும் பிரேரணை ஒன்றை திடீரென முன்வைத்து அது கடந்த வருடாந்த பொதுக்கூட்டதில் முன்வைத்து ஏற்றுக்கொள்ளப்பட்டதென்றும் அது அறிக்கையில் இடம்பெறவில்லை எனவும் குறிப்பிட்டார். அதாவது ஒரு அங்கத்தவர் ஒருமுறை மட்டும் ஆசிரிய மன்ற நிர்வாக சபையில் இடம்பெற முடியும். இருப்பினும் யார் இந்த பிரேரணையை முன்வைத்தவர் என்றோ அல்லது ஆமோதித்தவர் என்றோ அவரோ அல்லது சபையில் பிரசன்னமாயிருந்த ஏறத்தாழ 75 ஆசிரியர்களில் எவருமே கூற முன்வரவில்லை.
இப்பிரேரணைக்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. தற்போது நிர்வாக சபையில் இடம்பெறும் அங்கத்தவர்கள் முன்னைய நிர்வாக சபையில் இருந்தமை சுட்டிக்காட்டப்பட்டதுடன் முக்கிய பொறுப்புகளான தலைவர், செயலாளார் மற்றும் பொருளாளர் ஆகியோர் அடுத்துவரும் நிர்வாகசபையில் தெரிவு செய்யப்படும் நடைமுறை (மன்றின் தொடர்ச்சியான செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்காக)
மன்றத்தில் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
ஆத்திரம் அடைந்த அதிபர் ஏறத்தாழ 2 மணித்தியால வாத பிரதி வாதங்கள் தாண்டிய நிலையில் தான் பொய் பேச வேண்டிய தேவை இல்லை எனவும், தன்னுடைய கருத்து ஏற்றுக்கொள்ளப்படாவிடின் கடந்த வருடாந்த பொதுக்கூட்டம் முழுவதையும் செல்லுபடியற்றதாக்கிவிடுவேன் என சர்வாதிகாரப்போக்கில் எச்சரித்துள்ளார்.
இப்பிரேரணையை கொண்டுவருவதற்கு அதிபரின் இத்தனை பிரயத்தனங்கள் எதற்கு? ஒவ்வொரு ஆண்டும் புதிய முகங்களை கொண்ட செயற்குழு எதற்கு? அவர்களை கொண்டு என்ன செய்ய திட்டம் தீட்டியுள்ளார்? அதன் பின்னால் இருக்கும் சூழ்ச்சி யாது? இவை அனைத்தும் ஆசிரியர்கள் அறிந்தவையே. அவைபற்றி எழுதுவது இப்பத்தியின் நோக்கமல்ல.
தொடர்ந்து மன்றத்தின் செயற்பாட்டு அறிக்கை செயலாளரினால் வாசிக்கப்பட்டது. மன்றத்தின் தலைவர் வண டானியல் ஜெயரூபன் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டமை தொடர்பாக வாசிக்க முற்பட்ட வேளை அதிபர் அதனை தடுத்து வண டானியல் ஜெயரூபன் அவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளார் எனவும் அவர் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் ஒரு அப்பட்டமான பொய்யை சபையில் தெரிவித்து ஆசிரியர்களை அறிவிலிகளாக்க முற்பட்டுள்ளார் (உண்மையில் குறித்த ஆசிரியர் ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்டுவிட்டார்).
ஆசிரிய மன்றத் தலைவர் வண டானியல் ஜெயரூபன் என்பவர் சென் ஜோன்ஸ் கல்லூரியில் 17 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கில ஆசிரியராக பணியாற்றியவர். அங்கிலிக்கன் திருச்சபை குருவாகிய இவர் கல்லூரியின் முன்னாள் அதிபரின் காலத்தில் மூன்று வருட பட்ட மேற்கல்வியை தொடருவதற்காக அமெரிக்கா சென்று கல்வியை பூர்த்தி செய்து தற்போதைய அதிபரின் காலத்தில் நாடு திரும்பியவர். நாடு திரும்பிய இவர் புதிய அதிபரிற்கு அச்சுறுத்தலாக தென்பட்டமையால் புதிய அதிபரின் ஓரங்கட்டல்கள் மற்றும் பழிவாங்கல்களிற்கு உள்ளானார். இதனை அவதானித்த ஆசிரியர்கள் ஆசிரியர்களின் தேவைகளுக்காக அவர் குரல் கொடுப்பார் என்கிற நம்பிக்கையில் 2023 நடைபெற்ற ஆசிரிய மன்ற பொதுக்கூட்டத்தில் ஆசிரிய மன்றத்தின் தலைவராக ஏகமனதாக தெரிவு செய்தனர்.
தலைவராக வந்து ஒரு சில வாரங்களில் ஆசிரியர்களின் தேவைகளை கல்லூரி நிர்வாகத்திடம் தெரியப்படுத்தி தீர்வு கண்டவர். குறிப்பாக பயிற்றுவிப்பாளர்களிற்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டது.
இதனை போன்று ஆசிரியர்களின் பல்வேறுபட்ட தேவைகள், எதிர்பார்ப்புகள் என்பவற்றை அதிபர் முன் தயக்கமின்றி முன்வைத்தவர். சிலவற்றிற்கு தீர்வு கிடைத்தது. ஆனால் பலவற்றிற்கு தீர்வு இல்லை. தீர்வுகள் எட்டப்படாத நிலையில் ஆசிரியர் மன்ற நிர்வாக சபை ஆசிரியர்களின் தேவைகளை முன்னைய காலங்களைப்போன்று கல்லூரியின் ஆளுகை சபைக்கு (Governing Body) எழுத்துருவில் தெரியப்படுத்தியது. சில வாரங்களில் பதில் கிடைத்தது.
பதிலானது, பணி இடை நிறுத்தற் கடிதம் எனும் வடிவில் ஆசிரிய மன்றத் தலைவர் வண டானியல் ஜெயரூபன் அவர்களிற்கு வழங்கப்பட்டது.
யாருக்கு எதிராக முறைப்பாடு கொடுக்கின்றோமோ அவர்களிடமே கொண்டுபோய் முறைப்பாட்டை கையளிப்பது போன்றதுதான் ஆசிரியர் மன்றத்தின் இச்செயற்பாடு.
கல்லூரி ஆளுகை சபை
கல்லூரி ஆளுகை சபை என்பது அதிபரின் குடும்ப உறுப்பினர் (மனைவி) 20 ஆண்டுகள் தொடர்ச்சியாக பதவி வகிக்கும் 5 கல்லூரிகளை ஆளுகை செய்யும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு சபை ஆகும். இக்கல்லூரிகளாவன: யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி, கொழும்பு மகளிர் கல்லூரி, கண்டி மொபிரே கல்லூரி மற்றும் கண்டி ஹில்வுட் கல்லூரி.
கல்லூரி வரலாற்றில் முன்னாள் உப அதிபர் திரு JT செல்லையா தனது மனைவி சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் அதிபராக இருந்த காரணத்தால் சென் ஜோன்ஸ் கல்லூரியின் அதிபர் பதவி வெற்றிடம் வந்தபோது அதனை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே ஆளுகை சபையில் ஒரே குடும்பத்தினர் அங்கம் வகிக்கக்கூடாது என்பதற்கான முன்னுதாரணம்.
இவ்வாளுகை சபையானது இவ்வைந்து கல்லூரிகளின் அதிபர்களையும், உப அதிபர்களையும் நியமிக்கும் அதிகாரம் கொண்டது.
அதிபரின் மனைவி சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அதிபராக 20 ஆண்டுகள் ஆழுகை சபையில் அங்கம் வகிக்கிறார். அதனடிப்படையில் ஆளுகை சபையில் தற்போது பதவி வகிக்கும் ஏனைய 4 கல்லூரி அதிபர்களும் (கணவன் உட்பட) இந்த மூத்த உறுப்பினரின் “ஆசீர்வாதத்துடன்” நியமனம் பெற்றவர்கள்.
ஆளுகை சபையில் அங்கம் வகிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரியின் முகாமையாளரை நியமிப்பது யார்? அவரும் சென் ஜோன்ஸ் கல்லூரி அதிபராலேயே முன்மொழியப்பட்டவர்.
ஆளுகை சபையில் அங்கம் வகிக்கும் ஏனைய 4 கல்லூரிகளின் முகாமையாளர்களை நியமிப்பது யார்? சென் ஜோன்ஸ் கல்லூரியை போன்று நியமனங்கள் இடம்பெற்றிருப்பின், மேற்குறித்த 20 வருடங்கள் பதவி வகிக்கும் மூத்த உறுப்பினரின் “ஆசீர்வாதத்தில்” நியமனம் பெற்ற அதிபர்களின் சாய்வு எப்படி இருந்திருக்கும் என்பதை ஊகிப்பது கடினமில்லை.
அதுமட்டுமன்றி ஆளுகை சபையில் அங்கம் வகிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்க பிரதிநிதியும் கல்லூரி அதிபராலேயே பிரேரிக்கப்பட்டவர். இந்த நியமனத்தில் பழைய மாணவர் சங்கத்தில் எதுவித கலந்துரையாடலும் இடம்பெற்றதாக பதிவுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இக் “கலாசாரம்” ஏனைய 4 கல்லூரிகளுக்கும் 20 வருட மூத்த உறுப்பினரின் வழிகாட்டுதலில் தொற்றிக்கொள்ள வாய்ப்புண்டு.
இதனடிப்படையில் சென் ஜோன்ஸ் கல்லூரியின் தற்போதைய அதிபர் ஆளுகை சபையின் (குடும்ப ஆட்சியின்) முழுமையான அனுமதியுடனும் ஆதரவுடனும் தான் விரும்பிய எதனையும் ‘வைத்து வைத்து’ சாதித்துக்கொண்டிருக்கிறார்.
முகாமையாளரின் முகாமை
பாடசாலையின் முகாமையாளர் கொழும்பில் இருந்து கொண்டு (சில வேளைகளில் வெளி நாடுகளில் இருந்து கொண்டு) கல்லூரியை ‘முகாமை செய்வதால்’ அதிபர் ‘பாதுகாக்கப்பட்ட நிலையில்’ உள்ளார். அதுமட்டுமன்றி கல்வியமைச்சுக்கு அனுப்பப்பட வேண்டிய ஆசிரியர்களின் பல படிவங்கள் இவரின் கையொப்பத்திற்காக பாடசாலை அலுவலகத்தில் மாதக்கணக்கில் படுத்துறங்குவதாக ஆசிரியர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நண்பர்களை நியமிப்பர் அல்லது நண்பர்களாக்குவர்.
மனைவி அதிபராக உள்ள பாடசாலையில், பாடசாலையின் ஆளுகை சபை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பாடசாலையின் பொது நிகழ்வுகளில் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டமையும், கணவன் அதிபராக உள்ள பாடசாலையில் அப்பாடசாலையின் கணக்காய்வாளரே பிரதம விருந்தினராக கலந்து கொண்ட சம்பவங்களும் உண்டு.
அதிபருக்கெதிரான எந்த முறைப்பாடாக இருப்பினும் அது ஆழுகைசபைக்கெதிரானதாக கருதப்படும். எனவே முறைப்பாடு கொடுத்தவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னாள் கணக்காளர்
ஒருமுறை கல்லூரியின் முன்னாள் கணக்காளர் ஒருவர் அதிபருக்கெதிரான முறைபாட்டை ஆளுகை சபைக்கு தெரியப்படுத்திய போது குறித்த கணக்காளரை ஆளுகை சபை தலைவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தியமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இக்கணக்காளரை முன்னாள் ஆளுகை சபை தலைவி (இவர் ஒரு சட்டதரணி) தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரணை நடத்தியதாக கூறப்படுகின்றது. தற்போது ஆளுகை சபையில் அங்கம் வகிக்காத ஒருவரின் இத்தலையீடு பல சந்தேகங்களை பாடசாலை நலன் விரும்பிகளின் மத்தியில் எழுப்பியுள்ளது.
மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள்
பாடசாலை அணிகள், கழகங்களுக்கு தெரிவுகள் இடம்பெறும் போதும், கல்லூரி விருதுகள் தீர்மானிக்கப்படும் போதும் முறைகேடுகள் இடம்பெற்று மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். ஒருமுறை சகலதுறை மாணவர் விருது (General Excellence Award) மறுக்கப்பட்ட ஒரு மாணவனின் தந்தை அதிபரிற்கு எதிராக மேலதிகாரிகளுக்கு முறையிட்டு நிலைமையை பகிரங்கப்படுத்தி பெரிதாக்கியபோது குறித்த முன்னாள் ஆளுகை சபை தலைவி (அப்போது தலைவர்) இரண்டு சட்டதரணிகளை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் அனுப்பி குறித்த தந்தையை யாழ். பொலிஸ் நிலையம் அழைத்து மிரட்டியுள்ளார். இதுவரை அம் மாணவனிற்கு நீதி கிடைக்கவில்லை. (இச்சட்டதரணிகளின் செலவிற்கான நிதி ஏறத்தாழ அரை மில்லியன் ரூபாய் மாணவர்கள் வழங்கும் தவணைக் கட்டணம் மற்றும் கல்லூரி நலன் விரும்பிகளிடமியிருந்து கிடைக்கப்பெற்றிருக்க வேண்டும்.
மேலும் அண்மையில் இடம்பெற்ற முதன்மை மாணவ தலைவரிற்கான (Senior Prefect) நியமனத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் சம்பந்தமாக முறைப்பாடொன்று பெற்றோர் ஒருவரினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளுகை சபை மெளனம் காத்துள்ளது. அம்மாணவனிற்கோ அல்லது எதிர்வரும் காலங்களில் வரும் மாணவர்களிற்கோ நீதி கிடைக்குமா?
ஆளுகை சபையின் அதீத சிரத்தை
இப்படியான ஆளுகை சபையின் தற்போதைய அதிபரிற்கு சார்பான செயற்பாடுகள், ஆதரவு மற்றும் அதீத தலையீடுகள் முன்னைய அதிபரின் காலத்தில் இடம்பெறவில்லை என்பதிலிருந்து குடும்ப ஆட்சியின் செல்வாக்கு புலனாகின்றது.
ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள்:
தேர்ந்தெடுத்து குறிவைத்தல்
ஆசிரிய மன்றத்தின் 2023 இல் நடைபெற்ற வருடாந்த பொதுக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர் தெரிவு ஆரம்பிக்க இருந்த வேளையில் உயர்தர கலைப்பிரிவு பகுதித்தலைவர் திடீரென எழுந்து முன்சென்று, உத்தியோகத்தர் தெரிவின்றி முன்னைய செயற்குழுவையே தொடர அனுமதிப்பது நல்லது என ஒப்புவித்தார். மன்றில் இருந்த அநேகர் இதனை எதிர்த்து தமது கருத்துக்களை முன்வைத்தனர். அதில் குறிப்பாக ஒரு ஆசிரியர், வருடாந்த பொதுக் கூட்டமெனில் உத்தியோகத்தர் தெரிவு கட்டாயம் இடம்பெற வேண்டும் எனவும் இல்லையேல் நாம் இங்கே வந்திருக்க வேண்டிய தேவை இல்லை எனவும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார். இக் குறிப்பிடட ஆசிரியரை சரியான வேளைவரை காத்திருந்து – “ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு” என்பதிற்கிணங்க ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் காத்திருந்து அண்மையில் வேட்டையாடியுள்ளார் அதிபர்.
அதே வேளை இதே விடயம் சார்ந்த இன்னொரு சம்பவத்தில் மேற்குறித்த பகுதித் தலைவர் சம்பந்தப்பட மிகக் கச்சிதமாக காப்பாற்றி ஏழை மாணவனிற்கு அநீதி இழைத்துள்ளார் அதிபர்.
மரணித்த மனிதாபிமானம்
மரணப்படுக்கையில் இருக்கும் ஒரு தந்தையை பார்பதற்கு லீவு விண்ணப்பத்துடன் அதிபர் அலுவலகம் சென்ற ஒரு பெண் ஆசிரியருக்கு காத்திருந்தது அதிர்ச்சி. “நீர் இப்போதும் லீவு எடுப்பீர், பின்னர் பியூனெரல் (Funeral / மரண வீடு) ற்கும் லீவு கேட்பீர்” என உயிரோடிருக்கும் போதே புதைகுழி வெட்டும் மனிதாபிமானம் மரித்துப்போன ஒரு நிர்வாகம். (இன்றுவரை அத்தந்தை சுகநலத்துடன் உயிருடன் இருக்கின்றார்).
நியமனங்களில் முறைகேடு
அண்மையில் இடம்பெற்ற குறித்த ஆளுகை சபையின் கீழ் வரும் கொழும்பு மகளிர் கல்லூரி அதிபர் நியமனத்திலும், மற்றும் யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் உப அதிபர் நியமனத்திலும் முறைகேடுகள் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
சென் ஜோன்ஸ் கல்லூரியின் உப அதிபர் நியமனத்திலும் முறைகேடு இடம்பெற்றமை வெளிப்படை. 2020 இல் ஏற்பட்ட உப அதிபர் பதவிக்கான வெற்றிடம் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிரப்பப்படவில்லை. தனக்கு வேண்டிய ஒருவரை கொண்டு வரும் நோக்கோடு அவருக்கு 40 வயதாகும் வரை காத்திருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டமை கல்லூரிச் சமூகம் அறிந்ததே.
இதே வேளை இந்த “40 வயது தகைமை” தொடர்பான சர்ச்சை மறுபுறம். இதுவும் மேற்குறித்த பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியரை தகைமையற்றவர் என நிராகரிக்கும் நோக்கில் புதிதாக உள்வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென் ஜோன்ஸ் கல்லூரி உயர்தர வணிகப்பிரிவு பகுதித் தலைவர் நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஒரு ஆசிரியர் வணிகப்பிரிவில் அனைத்து தகைமைகளுடன் இருக்கத்தக்கதாக அனுபவத்தில் குறைந்த பிறிதொரு ஆசிரியரை நியமித்துள்ளார் அதிபர். இதற்கு அதிபர் கூறிய வினோத நியாயம்: குறித்த அனுபவம் கூடிய ஆசிரியர் தன்னுடைய மகனை சென் ஜோன்ஸ் கல்லூரியில் இணைக்காமல் பிறிதொரு பாடசாலையில் இணைத்து தான் சென் ஜோன்ஸ் கல்லூரி மீது கொண்ட விசுவாசத்தை நிரூபிக்க தவறிவிட்டார் என்பதாகும். ஆனால் அவரின் இடத்துக்கு நியமனம் பெற்ற இளம் ஆசிரியர் மிக விரைவாக தான் அதிபர் மீது கொண்ட விசுவாசத்தை பணிநீக்கம் செய்யப்பட்ட குறித்த ஆசிரியருக்கெதிராக சாட்சி கூறுவதன் மூலம் நிரூபித்துள்ளார். இதில் வியப்பு யாதெனில் இவர் கூறிய சாட்சி ஜோடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகித்து பாடசாலை நடத்திய விசாரணையே குற்றத்தை தள்ளுபடி செய்துள்ளது.
மேலும் இன்னுமொரு பகுதித்தலைவர் மேற்குறித்த “விசுவாசத்தை” அதிபருக்கு காண்பிக்க தவறிய காரணத்தினால், அதிகபட்ச வேலை அழுத்தங்கள் நிர்வாகத்தினால் கொடுக்கப்பட்டு அண்மையில் பகுதித்தலைவர் பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்து கொண்டார். ஆரம்ப பாடசாலையின் கீழ் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த இவர் பாடசாலையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியப் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆரம்ப பாடசாலையின் தலைமையாசிரியராக பணியாற்றிய
பாடசாலையில் 25 ஆண்டுகளுக்கு மேல் சேவையாற்றிய ஆசிரியர் ஒருவரும் ஆசிரியப் பணியில் இருந்து இராஜினாமா செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. அவரது பதவிக்கு தனக்கு “விசுவாசமானவரை” கொண்டுவரும் பொருட்டு அதிபரினால் திட்டமிடப்பட்டு அதிக வேலை அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டார் என்பது ஆசிரியர்கள் அறிந்ததே.
இதே போன்று தனக்கு “விசுவாசமானவரை” கொண்டுவரும் உள்நோக்கோடு அதிபரினால் திட்டமிட்டு இராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார் முன்னாள் கணக்காளர். இவர் உயர்ந்த கல்வி மற்றும் தொழில் தகைமைகள் கொண்ட ஒரு கணக்காளர். இவரின் இடத்துக்கு நியமிக்கப்பட்ட தற்போதைய கணக்காளர் எதுவித தொழில் அனுபவமும் இன்றி க.பொ.த. (உ.த) கல்வித்தகைமையுடன் நியமனம் பெற்றவர். நடைமுறையில் அதிபரே கணக்காளர்.
ஆசிரியரின் பணிநீக்கம்
அதிபரின் இப்படியான முறைகேடுகளை அனுமதிக்கும் ஆளுகை சபை ஆசிரியர் மன்றத்தின் கோரிக்கைகளை பார்த்ததும் சிலவாரங்களில் விசாரணை இன்றி கல்லூரியில் 17 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியரை சம்பளம் இன்றி இடைநிறுத்தியதில் ஆச்சரியம் இல்லை.
இடைநிறுத்தியதன் பின்னர் குறித்த ஆசிரியருக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு விளக்கம் கோரப்பட 4 வாரங்கள், அதன் பின் அவருக்கெதிராக குற்றப்பத்திரம் வழங்கப்பட மேலும் 6 வாரங்கள், தொடர்ந்து பாடசாலை விசாரணை ஆரம்பிக்க 7 வாரங்கள், முடிவுற 4 மாதங்கள், இறுதியாக 4 மாதங்களின் பின், ஒரு வருடத்திற்கு முன்னதாகவே ஆசிரியர் பணிநீக்கப்பட்டு விட்டார் எனும் செய்தி கொண்ட கடிதம். இப்பேற்பட்ட முறைகேடுகளை பார்த்து ஏனைய ஆசிரியர்கள் குழப்பமடையக்கூடாதென்று பல்வேறு சூழ்ச்சிகள் கையாளப்பட்டன.
அவற்றுள் ஒன்று “With Pay” சூழ்ச்சி. குறித்த ஆசிரியர் சம்பளத்துடன்தானே இடைநிறுத்தப்பட்டுள்ளார் என ஆசிரியர் ஒருவரை முதுகில் தட்டி ஆறுதல் பொய் பகர்ந்துள்ளார் பாடசாலையின் முகாமையாளர். தற்போது, குறித்த ஆசிரியர் பணி நீக்கப்படவில்லை மாறாக இடைநிறுத்தப்பட்டுள்ளார் என முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க முயன்றுள்ளார் அதிபர். உண்மையில் குறித்த ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட வேண்டிய குற்றத்தை செய்திருப்பின் குற்றத்தையும் தண்டனையையும் மூடிமறைப்பதற்கான காரணம் என்ன? வியப்பு யாதெனில் தான் இடைநிறுத்தப்பட்டதை ஏனையவர்களுக்கு கூறியதும் ஒரு குற்றமாக உள்ளடக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் வெளிப்படைத்தன்மை விலைபோய்விட்டது என்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
பின்வரும் குற்றச்சாட்டுக்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு எதிராக சுமத்தப்பட்டன:
- ஆசிரியர்களின் தேவைகள் மற்றும் மனத்தாங்கல்களை ஆளுகை சபைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியமை.
- ஆசிரிய மன்றத்திற்கு வாட்ஸாப் குழுமம் உருவாக்கியமை.
- ஆசிரிய மன்றத்தின் செயற்குழு கூட்டம் அதிபரிற்கு தெரிவிக்காமல் நடாத்தியமை.
- வெளிமாவட்டத்தில் ஒருவருடத்திற்கு முன்னர் நடைபெற்ற கிறிஸ்தவ மாணவர் ஒன்றியத்தின் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட மாணவர்கள் கைத்தொலைபேசி எடுத்துச்சென்ற விவகாரத்தில் மாணவர்கள் எடுத்துச்சென்ற கைத்தொலைபேசிகளை பறிமுதல் செய்து பெற்றோர்களை அழைத்து சந்தித்தமை (அதிபரிற்கு தெரியாமல்).
- ஆசிரிய மன்றத்திற்கு மின்னஞ்சல் உருவாக்கியமை.
- அதிபரின் அறிவுறுத்தல்களை பின்பற்றக்கூடாதென ஆசிரியர்களை மிரட்டியமை.
- தான் இடைநிறுத்தப்பட்டதை ஏனையவர்களுக்கு கூறியமை.
மூன்றாம் நபரைக்கொண்டு பாடசாலை நடத்திய விசாரணையானது மேற்குறித்த குற்றச்சாட்டுகளில் கடைசி மூன்றையும் குற்றமற்றவர் எனக்கூறி தள்ளுபடி செய்துள்ளது.
கல்வியமைச்சின் கண்காணிப்பு
இலங்கை தேசிய கணக்காய்வு அறிக்கை (2020) இன்படி கொழும்பில் உள்ள அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் விசாரணையின்றி நிறுத்தப்பட்ட முறைகேடு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கெதிரான பாடசாலைகளினால் நடத்தப்படும் ஒழுக்காற்று நடவடிக்கைகளில் கல்வித்திணைக்கள அதிகாரிகள் பங்குபற்றாமையால் பக்க சார்பற்ற முறையில் நியாயமான தீர்வு பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைப்பதில் நிச்சயமற்ற தன்மை உள்ளமையும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சென் ஜோன்ஸ் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் திரு து. பானுதேவன் 1960 களில் பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் இதே ஆளுகை சபை நீதிமன்ற வழக்கு எதிர்கொண்டு தோல்வியடைந்தமை நினைவுபடுத்துதற்குரியது.
2023 இல் இலங்கை சட்ட ஆணைக்குழுவிடம் சமர்பிக்கப்பட்ட உதவி பெறும் தனியார் பாடசாலைகள் தொடர்பான சட்ட சீர்திருத்தக் குழுவின் அறிக்கைப்படி பெரும்பாலான உதவி பெறும் தனியார் பாடசாலைகள் தங்களது ஆளுகை சபைகளுக்கு திறமை அடிப்படையிலன்றி தனிப்பட்ட உறவுகளின் அடிப்படையில் தமது உறவினர்களையும் நண்பர்களையும் நியமிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. இது சென் ஜோன்ஸ் கல்லூரி ஆளுகை சபைக்கு மிகப்பொருந்தும்.
கல்வித்திணைக்கள அலுவலர்கள், அதிகாரிகளை உரிய முறையில் “கவனிப்பதில்” சென் ஜோன்ஸ் கல்லூரி அதிபருக்கு நிகர் யாருமில்லை. அரசாங்கத்திடம் இருந்து சம்பளம் பெற்றுக்கொள்ளும் அதிபர் எந்தவித லீவும் (கல்வி அமைச்சின் வெளிநாட்டுப் பயண விடுமுறை) பெற்றுக்கொள்ளாது இந்தியா சென்று திரும்பியுள்ளார். நிலைமை தெரியவர கல்வித்திணைக்களம் நடவடிக்கை எடுக்க ஆரம்பிக்க, தான் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை அவசரமாக மேற்கொள்ள வேண்டி இருந்ததாகவும் அதனால் லீவு பெற்றுக்கொள்ள தவறிவிட்டதாகவும் வலயக் கல்விப் பணிப்பாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கல்வியமைச்சின் அதிகாரிகளை “கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து” விடயத்தை மூடி மறைத்துள்ளார்.
தாபன விதிக்கோவையின் எப்பிரிவின் கீழ் “அவசர உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம்” கல்வியமைச்சின் அனுமதி இன்றி மேற்கொள்ள முடியும்? இக்கால தாமத விண்ணப்பத்தை சிபாரிசு செய்த வலயக் கல்விப் பணிப்பாளர் யார்? மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் யார்? கல்வியமைச்சு இதற்கு எப்படி அங்கீகாரம் வழங்கியது? உத்தியோகபூர்வ விஜயம் எனில் இதற்கு எப்படி கடமை லீவு வழங்கப்பட்டது? உத்தியோகபூர்வ விஜயமெனில் எப்படி குடும்ப உறுப்பினர் பயணத்தில் இணைந்து கொள்ள முடியும்? கடமை லீவு எனில் பொது நிதி கையாளப்பட்டதா? (சம்பளத்துடனான விடுமுறையெனில்)? இவற்றுடன் தொடர்புபட்ட அரச அலுவலர்கள் யார்? போன்ற கேள்விகள் விடை காணப்பட வேண்டியவை. இல்லையெனில் ஒழுக்காற்று விசாரணை நடைபெற்று, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதா?
இதேபோல் ஒரு வருடத்தில் 80 நாட்கள் லீவு எடுத்து கல்வித் திணைக்கள அதிகாரிகளின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, B100 படிவத்தில் மோசடி செய்து முழுச் சம்பளத்தையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொண்ட சம்பவம் பத்திரிகைகளில் ஆதாரத்துடன் வெளிவந்த விடயம். பத்திரிகைகளில் வெளிவந்தும் கல்வித் திணைக்களம் மௌனம் காத்தது ஏன்? இவற்றுடன் தொடர்புபட்ட அரச அலுவலர்கள் யார்? விடை காணப்பட வேண்டிய வினாக்கள்.
மேலும் 2020 ஆம் ஆண்டில் மட்டும் 200 கோடி ரூபாயிற்கு மேல் அரசாங்கத்தினால் அரச உதவி பெறும் தனியார் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டிருந்தது என்றும், ஆனால் அப்பாடசாலைகள் கல்வி அமைச்சின் சுற்று நிரூபங்கள், அறிவுறுத்தல்களை பின்பற்றுவதில்லை என்றும், கல்வியமைச்சின் கண்காணிப்பு இப்பாடசாலைகளுக்கு போதியளவு கிடைக்கப்பெறுவதில்லை என்றும் இலங்கை தேசிய கணக்காய்வு அறிக்கை (2020) குற்றம் சுமத்தியுள்ளது.
நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இருந்து இவ்வளவு பெருந்தொகைப் பணத்தை ஆண்டாண்டுதோறும் இத்தனியார் பாடசாலைகளுக்காக செலவிடும் ஊழலுக்கெதிரான அரசாங்கம் இப்பாடசாலைகளில் நடக்கும் மோசடிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்குமா?
இருநூறு ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியத்தை கொண்டு பலரின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பில் உருவான சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் நூற்றாண்டுக்கு மேற்பட்ட வரலாற்றை கொண்ட சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் ஆளுகை சபையில் நிலவும் குடும்ப ஆட்சி முடிவுக்கு வருமா?
இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் கவனத்திற்கு.










