மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி பிரதேசத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத வடிசாராய உற்பத்தியை கட்டுப்படுத்துமாறு கோரி இன்று ஞாயிற்றுக்கிழமை (19) கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு சித்தாண்டி சமூக மட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு பேரணியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத், ஏறாவூரப்பற்று பிரதேச சபை தவிசாளர் மு.முரளிதரன், உறுப்பினர்கள் ஆலய நிர்வாகத்தினர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
சித்தாண்டி முச்சந்தி பிள்ளையார் ஆலய முன்றலில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தி கோஷங்களையெழுப்பி பேரணியாக சித்தாண்டி இந்து மயான வீதிவரை சென்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தாயைக் கொன்றது சேய் போதையே எமக்கு தீராத நோய், காப்பாற்று காப்பாற்று போதையிடமிருந்து சிறுவர்களை காப்பாற்று, பிரதேச செயலாளரே இப்போதாவது கண் திறந்துபார், நாடாளுமன்ற உறுப்பினர்களே போதைப்பொருள் தொடர்பாக எமது பிரதேசத்தில் கவனம் எடு, பொலிஸாரே நடவடிக்கையை துரிதப்படுத்து, அதிகாரம் நம்பிக்கை அதை போதை கும்பலுக்கு ஒப்படைக்காதே, வழக்கறிஞர்களே போதைபொருள் வியாபாரிகளுக்காக வாதாடுவதை நிறுத்து, நீதித்துறையே போதைக்கெதிரான தண்டனையை அதிகப்படுத்து போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி கோசங்களையெழுப்பி ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கவனயீர்ப்பு போராட்ட முடிவில் தமது கோரிக்கைகைள் அடங்கிய மகஜரை நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத்திடம் கையளித்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத வடிசாராத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சரிடம் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்படும்.
சித்தாண்டி, மாவடிவேம்பு பகுதிகளில் அதிகரித்துவரும் சட்டவிரோத விற்பனையை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் பேசி நடவடிக்கைய எடுக்கபடும் என்றார்.
கடந்த வெள்ளிக்கிழமை (17) சித்தாண்டியில் மதுபானம் வாங்குவதற்கு பணம் வழங்க மறுத்த தாயை தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















