ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைவதற்கு எவ்வித தடையும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
தலதா அத்துகோரலவுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியையும் இவரே சிறிது காலம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இரு தரப்பு இணைவு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஒன்றிணைவது தொடர்பில் சாதகமான சூழ்நிலையே உள்ளது. எனவே, தடைகள் இருக்கும் எனக் கருத வேண்டியதில்லை. எதிர்காலத்தில் சங்கமம் நடக்கும் என உறுதியாக நம்புகின்றோம். விரைவில் இது சாத்தியப்படும்.
ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினருக்குப் பதவி என்பது முக்கியம் அல்ல. எமக்கு நாடுதான் முக்கியம்.
நாடு சரியான திசையில் செல்ல வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். ஆனால், இந்த ஆட்சியின் கீழ் அது நடப்பதாகத் தெரியவில்லை.” – என்றார்.










