இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ்த் தேசிய மக்கள் திட்டமிட்ட அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள் மற்றும் இனவழிப்பு நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக சிவில் செயற்பாட்டாளர் இருதயம் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் 04.02.2026 சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள் எனக் குறிப்பிட்டார்.
04.02.1948 அன்று பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள் ஆட்சி அதிகாரங்களை சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளிடம் ஒப்படைத்ததன் பின்னரே, தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ்த் தேசிய மக்கள் மீது திட்டமிட்ட அடக்குமுறைகள், இனவழிப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒடுக்குமுறைகள் தொடர்ந்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலைமையை கருத்தில் கொண்டு, 04.02.2026 நாளை கரிநாளாக பிரகடனப்படுத்தி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியவை இணைந்து வடக்கு – கிழக்கு பகுதிகளில் பாரிய பேரணியை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.
இந்த பேரணி, தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள், பாதுகாப்பு மற்றும் அரசியல் எதிர்காலத்தை வலியுறுத்தும் வகையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். அதன்படி, வடக்கு – கிழக்கு தமிழர்களின் பூர்வீக தாயகம் என்பதைக் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், தமிழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் வகையில் தமிழ் மக்களின் தேசிய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும், தமிழ் இனவழிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் நிரந்தர பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசு கையகப்படுத்தியுள்ள தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும், தமிழர் தாயகத்தில் புத்த விகாரைகள் நிறுவி, தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரங்களை பயன்படுத்தி நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், “பயங்கரவாதத் தடைச்சட்டம்” என்ற பெயரில் தொடரும் தமிழின அடக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு, நீண்டகாலமாகச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 77 ஆண்டுகளாகத் தொடரும் தமிழர் இனவழிப்பு நிறுத்தப்பட்டு, சர்வதேச நீதிப் பொறிமுறை மூலம் தமிழர்களின் வாழ்வுரிமை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர்களின் பூர்வீகத் தாயகம் என்பதையும், தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்பதையும் ஏற்றுக்கொண்டு, வட்டுக்கோட்டைத் தீர்மானம் மற்றும் திம்பு பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இறையாண்மை கொண்ட தேச அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.
இந்த அனைத்து கோரிக்கைகளையும் முன்வைத்து, 04.02.2026 அன்று வடக்கு – கிழக்கு முழுவதும் பாரிய பேரணி முன்னெடுக்கப்படும் என சிவில் செயற்பாட்டாளர் இருதயம் செல்வகுமார் தெரிவித்தார்.










