பிரித்தானியாவில் புலம்பெயர்வுக்கு எதிராக ஒன்றரை இலட்சம் பேர் சேர்ந்து மாபெரும் பேரணியை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை இந்த மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தீவிர வலதுசாரி ஆதரவாளரான டாமி ரொபின்சன் தலைமையில் இந்தப் பேரணி ‛Unite The Kingdom’ என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்டது.
சுமார் ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியில் ஈடுபட்ட சிலர், காவல்துறையினர் மீதும் தாக்குதலை நடத்தினர். கூட்டத்துக்குள் இருந்து காவல்துறையினர் மீது போத்தல்களை வீசியதில், 26 பேர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அமைதியைச் சீர்குலைத்தல், வன்முறை, தாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் போராட்டக்காரர்களுக்கு பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
மக்களுக்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. இங்கிலாந்து சகிப்புத் தன்மை, பன்முகத்தன்மை, மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு நாடு. நமது கொடி நமது பன்முகத்தன்மையை குறிக்கிறது. ஆனால் இன ரீதியான மிரட்டலை பொறுத்துக் கொள்ள மாட்டோம். மற்றவர்களை மிரட்டுவதன் மூலமாகவோ அல்லது பணியில் இருக்கும் அதிகாரிகளை தாக்குவதன் மூலமாகவோ அவர்கள் சட்டத்தை கையில் எடுக்க கூடாது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
புலம்பெயர்ந்தோருக்கு எதிரான இந்தப் பேரணியைக் குறிப்பிட்டுப் பேசிய டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான பிரிட்டன் அரசைக் கலைக்க வேண்டும் என்று கூறினார்.
போராட்டக்காரர்களுடன் காணொளி அழைப்பில் பேசிய எலோன் மஸ்க், “நீங்கள் வன்முறையைத் தேர்ந்தெடுத்தாலும் இல்லாவிட்டாலும், வன்முறை உங்களைத் தேடி வருகிறது. நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டும் அல்லது நீங்கள் இறந்துவிட வேண்டும். அதுதான் உண்மை என்று நினைக்கிறேன் என்று தெரிவித்தார். மேலும், கட்டுப்பாடற்ற புலம்பெயர்வு பிரிட்டனை அழித்து விடும் என்றும் அவர் எச்சரித்தார்.
ஏற்கனவே குடியேற்ற விதிமுறைகளை பிரித்தானியா கடுமையாக்கியுள்ளது. நிகர இடம்பெயர்வை குறைப்பதற்காக குடியேற்ற விதிமுறைகளை கடுமையாக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளமை தொடர்பான செய்திகளை அண்மைக்கால செய்திகள் வாயிலாகவும் அறியலாம். நிகர இடம்பெயர்வு என்பது பிரித்தானியாவுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கைக்கும், வெளியேறும் எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.
குடியேற்ற விதிமுறைகளின் படி, பிரித்தானியாவில் குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்க 10 வருடங்கள் வசித்திருப்பது கட்டாயம் என குறிப்பிட்டப்பட்டுள்ளது.
அதன்படி, ஐந்து ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு விசாவுக்கும் புதிய ஆங்கில மொழி அறிவுக்கு மேலதிகமாக இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டவுள்ளது.
நிகர இடம்பெயர்வை குறைப்பதற்கான சீர்திருத்தங்களை பிரித்தானியா பிரதமர் கெயிர் ஸ்டார்மர் ஏற்கனவே தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
2020 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியபோது, நிகர இடம்பெயர்வு அதிகரித்தது.
மக்களது இடம்பெயர்வானது, 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் 903,000 ஐ எட்டியது. அதன்பின்னர், 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 728,000 ஆகக் குறைந்தது.
ஆனால், 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு முந்தைய அதிகபட்சமான 329,000 ஐ விட அதிகமாக உள்ளது.
சட்டப்பூர்வ இடம்பெயர்வு மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை சமாளிக்க பிரித்தானியா அரசாங்கம் அழுத்தத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் எலிசபெத் மகாராணி தலைமையிலான பிரித்தானியா ஈழத்து மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்றபோது அவர்களை அரவணைத்து சம உரிமை வழங்கி இருந்தது.
இரண்டாம் எலிசபெத் மகாராணி தலைமையிலான பிரித்தானியா ஜனநாயகம் கொண்ட நாடாக இருந்தது. குறிப்பாக யுத்தம் காரணமாக ஈழத்தில் இருந்து இடம்பெயர்ந்து அங்கு சென்ற மக்களை அரவணைத்து, அந்த நாட்டு மக்களுக்கு இருக்கும் சம உரிமையை வழங்கக்கூடிய ஒரு நிலையை பிரித்தானியாவில் காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று ஈழத்து புலம்பெயர்ந்தோர் அந்த நாட்டில் இருந்து உரிமைப் போராட்டங்களை மேற்கொள்ளும் போதெல்லாம் அவர்களை அடக்கு முறைக்கு உள்ளாக்கும் நிலை அங்கு இருக்கவில்லை. ஜனநாயக மரபுகள் அந்த நாட்டிலே மேலோங்கி இருப்பதே இதற்கு காரணமாகும்.
மேலும், கடந்த கிழமை புலம்பெயர்வுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பிரித்தானியர்கள் இலங்கை மற்றும் இந்திய உணவகங்களில் சிற்றுண்டிகளை உண்டு ஓய்வுபெற்றுச் சென்றுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த ஆர்ப்பாட்டங்கள் ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமியர்களுக்கெதிரானது என்ற கருத்தும் நிலவிவரும் நிலையில் ஈழத்தமிழர் மற்றும் இந்திய மக்களுக்கும் இந்தத் தகவல்கள் சற்று ஆறுதல் தரும் செய்தியாகவே இருக்கின்றது.



















