இலங்கை, பெருகிவரும் குடும்பங்களை வறுமைக்கோட்டிற்குக் கீழே தள்ளும் ஒரு முன்னோடியில்லாத பொருளாதார சவாலை எதிர்கொள்கிறது. அஸ்வெசும திட்டம் போன்ற சமீபத்திய நலத்திட்டங்கள், பாதிப்பின் அளவையும், விரிவான, நீண்டகால தீர்வுகளுக்கான அவசரத் தேவையையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலையில் தொடங்கப்பட்டதிலிருந்து, 3.7 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் அஸ்வெசும உதவிக்காக விண்ணப்பித்துள்ளன, இது பரவலான பொருளாதார பாதுகாப்பற்ற தன்மையைக் காட்டுகிறது. எனினும் கடுமையான ஆய்வுக்குப் பின்னர், சுமார் 1.7 மில்லியன் குடும்பங்கள் தகுதியானவர்கள் என்று கண்டறியப்பட்டது. இது, நாட்டின் கணிசமான பகுதி மக்கள் உணவு, வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்க உதவியை நம்பியிருப்பதை உணர்த்துகிறது.
அஸ்வெசும திட்டம் குடும்பங்களை நான்கு குழுக்களாகப் பிரிக்கிறது, ஒவ்வொரு குழுவும் வெவ்வேறு அளவிலான நிதி உதவியைப் பெறுகின்றன. அவர்களின் பாதிப்பு அளவைப் பொறுத்து, ஒரு மாதத்திற்கு 5,000 ரூபா முதல் 17,500 ரூபா வரை கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டம் உடனடி நிவாரணம் அளித்தாலும், குறுகிய கால நிதி உதவி இலங்கையில் உள்ள வறுமையின் கட்டமைப்பு மற்றும் முறை சார்ந்த காரணங்களை முழுமையாக தீர்க்க முடியாது என்பது தெளிவாகிறது.
இலங்கையில் வறுமையின் புவியியல்
இலங்கையில் வறுமை சீரற்ற முறையில் பரவியுள்ளது, கிராமப்புற குடும்பங்கள் மற்றும் தோட்ட சமூகங்கள் அதிக சுமையைத் தாங்குகின்றன. வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் குடும்பங்களில் சுமார் 80% கிராமப்புறங்களில் உள்ளனர். இங்குள்ள குடும்பங்கள் விவசாயம் மற்றும் முறைசாரா தொழிலை நம்பியிருப்பதால், பருவகால மற்றும் பொருளாதார அதிர்ச்சிகளால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த குடும்பங்கள் பெரும்பாலும் ஒழுங்கற்ற வருமானம், சந்தைகளுக்கான வரையறுக்கப்பட்ட அணுகல் மற்றும் போதுமான உட்கட்டமைப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர், இது வறுமையின் சுழற்சியைத் தொடரச் செய்கிறது.
கிராமப்புறங்களில், மலைநாட்டு தோட்டத் துறையில் வறுமை மிகக் கடுமையாக உள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 5%க்கும் குறைவாக இருந்தாலும், தொடர்ச்சியாக அதிக வறுமை விகிதங்களைக் கொண்டுள்ளது. குடும்ப வருமானம் மற்றும் செலவு கணக்கெடுப்பு (HIES) 2019 இன் படி, 31.7% தோட்டக் குடும்பங்கள் தேசிய வருமான வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர். சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கை தரத்தில் உள்ள குறைபாடுகளைக் கணக்கில் கொள்ளும் பன்முக வறுமை குறிகாட்டிகள் மூலம் அளவிடப்படும்போது, 2019 ஆம் ஆண்டின் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முன்முயற்சி (OPHI) அறிக்கையின்படி, இந்த விகிதம் 51.3% ஆக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த புள்ளிவிவரங்கள் ஒரு கடுமையான உண்மையை வெளிப்படுத்துகின்றன. இலங்கையின் மக்கள் தொகையில் ஒரு பெரிய பகுதி பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், சமூக ரீதியாகவும், கட்டமைப்பு ரீதியாகவும் பின்தங்கியுள்ளது. குறிப்பாக மலைநாட்டு தோட்டங்களில் போதுமான வீட்டுவசதி, தரமான சுகாதாரப் பாதுகாப்புக்கான வரையறுக்கப்பட்ட அணுகல் மற்றும் மோசமான கல்வி வாய்ப்புகள் ஆகியவை குடும்பங்கள் வறுமையிலிருந்து தப்பிப்பதற்கான தடைகளை உருவாக்குகின்றன.
மனித தாக்கம்
இலங்கையில் வறுமை என்பது வெறும் புள்ளிவிவரங்களின் தொகுப்பு அல்ல – அதற்கு ஆழமான மனித விளைவுகள் உள்ளன. வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் குடும்பங்கள் தினசரி ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய போராடுகின்றனர். இது பெரும்பாலும் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு, வளர்ச்சி குன்றுதல் மற்றும் தடுக்கக்கூடிய நோய்களுக்கு வழிவகுக்கிறது. கல்விக்கான வரையறுக்கப்பட்ட அணுகல் அடுத்த தலைமுறைக்கான வாய்ப்புகளைக் கட்டுப்படுத்துகிறது. சமூகங்களை வறுமையின் சுழற்சியில் சிக்க வைக்கிறது. நிதி நெருக்கடியில் உள்ள குடும்பங்கள் பெரும்பாலும் கல்வி அல்லது சுகாதாரப் பாதுகாப்பை விட அடிப்படை உயிர்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதால், பெண்கள் மற்றும் குழந்தைகள் (disproportionately) ஏற்றத்தாழ்வாக பாதிக்கப்படுகின்றனர்.
அஸ்வெசும விண்ணப்பங்களின் அதிகரிப்பு, நாடு முழுவதும் உள்ள குடும்பங்களின் பதற்றம் மற்றும் அவ நம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சில விண்ணப்பதாரர்கள் உதவிக்கான கடுமையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் இருக்கலாம், ஆனால் 3.7 மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்களின் எண்ணிக்கை, பெரும்பாலான குடும்பங்கள் நிதி ரீதியாக பாதுகாப்பற்றதாக உணர்கின்றன என்பதைக் காட்டுகிறது. இது நாட்டின் பரந்த பொருளாதார பலவீனத்தை சுட்டிக்காட்டுகிறது. இங்கு வறுமைக் கோட்டிற்கு சற்று மேலே உள்ளவர்களும் பணவீக்கம், வேலையின்மை மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் காரணமாக மீண்டும் வறுமையில் சிக்கிக்கொள்ளும் அபாயத்தில் உள்ளனர்.
குறுகிய கால தீர்வுகள் மற்றும் நீண்ட கால உத்தி
அஸ்வெசும மற்றும் சமுர்த்தி போன்ற நலத்திட்டங்கள் முக்கியமான நிவாரணத்தை அளித்தாலும், அவை குறுகிய கால தலையீடுகளே. நிலையான வறுமைக் குறைப்புக்கு, குடும்பங்கள் அரசாங்க உதவியை நிரந்தரமாக நம்பியிருப்பதற்கு பதிலாக சுயசார்புடையவர்களாக மாற உதவும் கொள்கைகள் தேவை. திட்டங்கள் வெறும் பணப் பரிமாற்றங்களை கடந்து, திறன் மேம்பாடு, தொழில் பயிற்சி மற்றும் உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கான அணுகலை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
கிராமப்புற மற்றும் தோட்ட சமூகங்களில் இலக்கு வைக்கப்பட்ட தலையீடுகள் சிறப்பாக இருக்கும். உதாரணமாக, குறுங்கடன் திட்டங்களை அறிமுகப்படுத்துவது குடும்பங்களை சிறு வணிகங்களைத் தொடங்க ஊக்குவிக்கலாம். அதே சமயம், தொழிற்பயிற்சி திட்டங்கள் இளைஞர்களுக்கு நகர்ப்புற மையங்கள் அல்லது தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் விவசாய செயலாக்கம் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் தேவைப்படும் திறன்களை வழங்க முடியும். கிராமப்புறங்களில் போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் இணைப்பை விரிவுபடுத்துவதும் சமூகங்கள் சந்தைகள் மற்றும் வேலை வாய்ப்புகளை எளிதாக அணுக உதவும்.
பணியாளர் பங்கேற்பை ஊக்குவித்தல்
வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களை பணியாளர்களில் நுழைய ஊக்குவிப்பது மற்றொரு முக்கியமான படியாகும். பல குடும்பங்கள் திறன் இடைவெளிகள், குழந்தை பராமரிப்பு பொறுப்புகள் காரணமாக தயங்குகின்றனர். இலக்கு வைக்கப்பட்ட வழிகாட்டுதல், நெகிழ்வான வேலைவாய்ப்பு திட்டங்கள் மற்றும் ஊக்கத்தொகைகள் இந்த தடைகளைத் தாண்டிச் செல்ல உதவும். கல்வி, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு இடையே தொடர்புகளை உருவாக்குவது பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் வறுமையிலிருந்து பொருளாதாரத்தில் உற்பத்தி ரீதியாக பங்கேற்பதற்கு மாற உதவுகிறது.
உலகளாவிய உதாரணங்களில் இருந்து கற்றல்
இலங்கை தனித்துவமான சவால்களை எதிர்கொண்டாலும், மற்ற நாடுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். தெற்காசியாவில், இந்தியாவின் MGNREGA திட்டம் பண உதவியையும் உத்தரவாத வேலைவாய்ப்பையும் வழங்குகிறது. கிராமப்புற குடும்பங்களுக்கு அதிகாரம் அளித்து உள்ளூர் பொருளாதாரங்களை ஊக்குவிக்கிறது. வங்கதேசம், குறுங்கடன் மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளைப் பயன்படுத்தி குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், குறிப்பாகப் பெண்கள், வறுமையிலிருந்து வெளியேற உதவியுள்ளது. பிரேசிலின் Bolsa Família போன்ற லத்தீன் அமெரிக்காவில் உள்ள நிபந்தனைக்குட்பட்ட பணப் பரிமாற்ற திட்டங்கள், நிதி உதவியை கல்வி மற்றும் சுகாதார விளைவுகளுடன் இணைத்து, நீண்டகால சமூக இயக்கத்தை வளர்க்கின்றன. இலங்கை இதேபோன்ற அணுகுமுறைகளை மாற்றியமைக்கலாம், நிதி உதவியை கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் வாய்ப்புகளுடன் இணைக்கலாம்.
எதிர்காலப் பாதை
இலங்கையில் வறுமையைத் தீர்க்க சமூக பாதுகாப்பு, பொருளாதாரக் கொள்கை மற்றும் மனித மேம்பாடு ஆகியவற்றில் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை. அஸ்வெசும போன்ற நலத்திட்டங்கள் அத்தியாவசிய உயிர்நாடிகளாக இருந்தாலும், அரசாங்கம் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை ஈட்ட நிலையான வழிகளில் முதலீடு செய்ய வேண்டும், குறிப்பாக கிராமப்புற மற்றும் தோட்டப் பகுதிகளில் குடும்பங்களை சார்பு நிலையிலிருந்து உற்பத்தித்திறனுக்கு மாற்றுவது சமூக சம பங்குக்கு மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்கும் முக்கியமானது.
தைரியமான, நீடித்த தலையீடுகள் இல்லாமல், வறுமை இலங்கையின் சமூக – பொருளாதார நிலப்பரப்பில் ஒரு நிரந்தர அம்சமாக மாறும் அபாயம் உள்ளது. நிதி உதவி, திறன் மேம்பாடு மற்றும் பணியாளர் பங்கேற்பை ஒருங்கிணைக்கும் ஒரு செயல்திறன் மிக்க உத்தி, பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் உயிர்வாழ மட்டுமல்ல, செழிக்கவும், நாட்டிற்கு மிகவும் உள்ளடக்கிய மற்றும் மீள் எழுச்சி மிக்க எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் உதவும்.










