கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற நாளில்தான் மலையகத்தின் ஆளுமைமிக்க தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் இவ்வுலகுக்கு விடைகொடுத்திருந்தார்.
1964 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி பிறந்த அமரர் ஆறுமுகன் தொண்டமான் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி தன் வாழ்க்கைக்கு விடைகொடுத்து இன்றுடன் 5 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
அமரர் ஆறுமுகன் தொண்டமான் 1964 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி இந்தியாவின் புதுக்கோட்டையில் முனாபுத்தூரில் பிறந்தார்.
கொழும்பிலுள்ள ரோயல் கல்லூரி மற்றும் இந்தியாவிலுள்ள ஏர்காட்டில் மோர்க்போர்ட் பள்ளியில் அவர் கல்வி பயின்றார். பின்னர் அமெரிக்காவில் பெடிசக் பல்கலைக்கழகத்தில் கோப்றேட் மெனேஜ்மன்ட் என்ற உயர்கல்வியைக் கற்று இஸ்ரேயலில் தொழிற்சங்கம் சார்ந்த கல்வியை முடித்தார்.
இவர் படிக்கும் காலத்தில் தன் தனித்துவத்தையும், அனுபவத்தையும் வைத்துக்கொண்டு தனது மக்களுக்காக தன்னால் இயன்றதை செய்யவேண்டுமென்று எண்ணிய அமரர் ஆறுமுகன் தொண்டமான் 1990 ஆம் ஆண்டு இலங்கைக்கு மீண்டும் திரும்பினார்.
இலங்கை வந்திறங்கிய அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மனதில் அரசியல் ஆர்வம் மிகையாக இருந்த தருணத்தில் சௌமியமூர்த்தி தொண்டமான் வழியில் 1990 ஆம் ஆண்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இணைந்து அரசியலில் தனது பணிகளைத் தொடர தனது பயணத்தை ஆரம்பித்தார்.
பின்னர் குறுகிய காலத்தினுள்ளே தனது துல்லியமான பேச்சாலும், நுணுக்கமான அறிவால் 1993 ஆம் ஆண்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளராகவும், 1994 ஆம் ஆண்டு கட்சியின் பொதுச்செயலாளராகவும் பொறுப்பேற்று தனது அடுத்த கட்ட அரசியல் பயணத்தைப் பதிவு செய்தார். தொடர்ந்து அதே ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு 72 ஆயிரம் வாக்குகளைப் பெற்று மாபெரும் வெற்றிக்கண்டு தனது அரசியல் பயணத்தை நாடாளுமன்றம் நோக்கி தொடங்கினார்.
அவரது வளர்ச்சிப் பாதையை ஒருபடி மேலே உயர்த்திட அடுத்தடுத்த வெற்றிகளுக்கு, அவரது ஆதரவாளர்களும், அவரது அன்பான மக்களும் வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள் என்றே குறிப்பிட வேண்டும்.
1996 ஆம் ஆண்டு 72 ரூபாவாக இருந்த தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் 100 ரூபாவாக உயர்த்துவதற்கு ஒரு வார அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது. அந்தக் கோரிக்கைக்கு அப்போதைய பெருந்தோட்டத்துறை அமைச்சர் செவிசாய்க்காத காரணத்தால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைத் துணிவோடு கொண்டுவந்ததன் மூலம் அன்றைய அரசிலே இருந்தாலும் அரசை எதிர்ப்பதற்கான துணிவை அவர் வெளிப்படுத்தினார்.
1999 ஆம் ஆண்டு அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலஞ்சென்றதன் பின்னர், அப்போதைய ஜனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையாருடன் இணைந்து சிறப்பாகச் செயற்பட்டு கால்நடை வள அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சைப் பொறுப்பேற்று அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் வெற்றிடத்தை திருப்திகரமாக அவர் நிறைவு செய்தார்.
2000 ஆம் ஆண்டில் தொழிற்சங்கத்தின் தலைமையை ஏற்ற அவர் தோட்டத்தொழிலாளர்களின் நாள் சம்பள அதிகரிப்புக்காக நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக 20 வீத சம்பள அதிகரிப்பை அவர் பெற்றுக்கொடுத்தார். அதே ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு ஆசனங்ளைப் பெற்று அந்த அரசிலும் அரசை நிர்ணயிக்கும் சக்தியாக அமரர் ஆறுமுகன் தொண்டமான் விளங்கினார்.
இதேவேளை, நாடாளுமன்றத்தில் 17 ஆவது யாப்பு திருத்தம் முன்வைக்கப்பட்ட போது இந்திய வம்சாவளி மக்கள் தனித் தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்திய வம்சாவளி பிரதிநிதி ஒருவர் அங்கம் வகிக்கும் அந்தஸ்தை அவர் நிலைநாட்டினார்.
தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு அந்த அரசில் வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சைப் பொறுப்பேற்று அரசியலில் ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சராக விளங்கினார்.
2002 ஆம் ஆண்டு மீண்டும் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சு நடத்தி 111 ரூபாவாக இருந்த தோட்டத்தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 147 ரூபாவாக உயர்த்தினார். இதனைத் தொடர்ந்து அரசு தனியார் துறைக்கு அறிவித்த சம்பள உயர்வு தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஹட்டன் – மல்லியப்பு சந்தியில் 24 நாள்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தை அவர் நடத்தினார்.
இந்தப் போராட்டத்தை ஏளனமாக விமர்சித்த எதிராளிகள் இறுதியாக போராட்டத்தில் தாமும் பங்குகொள்ள முன்வந்தனர். இதன் விளைவாக போராட்டம் வெற்றிகாரமாக நிறைவு பெற்றது.
2003 ஆம் ஆண்டு இலங்கையில் இந்திய வாம்சாவளியைச் சேர்ந்த மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்குக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுப்பதில் பாரிய இன்னல்களைச் சந்தித்து அந்தக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுத்த பெருமை இவரையே சாரும்.
மேலும் 2003 ஆம் ஆண்டு மலையக மக்களின் பிரதான பிரச்சினையாக அமைந்த பிரஜாவுரிமை விடயத்தை இந்திய கடவுச்சீட்டு பெற்றவர்களையும் இலங்கை பிரஜைகளாக அங்கீகரிக்கும் விசேட சட்டமூலத்தை அரசு கொண்டு வருவதற்கு அவர் காரணமாக இருந்தார்.
2004 ஆம் ஆண்டு நடைப்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட அவர் முதன்முறையாக 8 நாடாளுமன்ற அங்கத்தவர்களைத் தெரிவு செய்வதற்குக் காரணமாக இருந்தார்.
2005 ஆம் ஆண்டு அமைச்சரின் ஆக்கபூர்வமான நடவடிக்கையால் 3179 மலையக ஆசிரியர் நியமனமும், 500 தபால் சேவை ஊழியர்களுக்கும், 200 தொடர்பாடல் உத்தியோகத்தர்களுக்குப் பதவிகளும் கிடைக்கப் பெற்றன.
2006 ஆம் ஆண்டு மீண்டும் அரசில் இணைந்த ஆறுமுகன் தொண்டமான் இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அமைச்சைப் பொறுப்பேற்று இளைஞர்களின் எதிர்காலத்தை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டங்களைத் தொண்டமான் ஞாபகார்த்த மன்ற, பிரஜாசக்தி வேலைத்திட்டத்தினூடாகச் செயற்படுத்தி வந்தார்.
2006 – 2009 வரையான நான்கு ஆண்டுகளுக்கு மாத்திரம் முழு மலையக அபிவிருத்தி பணிகளுக்காக அண்ணளவாக பாரியளவு நிதி ஒதுக்கி செலவிடப்பட்டது. அதே ஆண்டில் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சு நடத்தி 405 ரூபா சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுத்தார்.
2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு 60 ஆயிரம் வாக்குகளைப். பெற்று முதன்மையாக விளங்கினார். இதனோடு கால்நடை வள மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சும் வழங்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு மீண்டும் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சு நடத்தி 515 ரூபா சம்பள உயர்வையும் பெற்றுக்கொடுத்தார்.
கல்வியியல் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையங்கள், தொழில் வாய்ப்புக்கள் என இவரின் பணிகள் தொடர்ந்தன. இவரின் வழிக்காட்டலின் கீழ் அதிகமான மலையக ஆசிரியர்கள் உருவாகியுள்ளனர்.
அமரர் ஆறுமுகன் தொண்டமான் மலையக மக்களின் நலனுக்காக கடந்த 30 ஆண்டுகளாகப் பணியாற்றியவர். இவரது கனவு தோட்ட மக்களுக்கு 1000 ரூபா நாள் சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதும், மலையகப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதும் ஆகும். இதற்காக எத்தனையோ இன்னல்களுக்கு மத்தியில் அரசுடனும், தொழிற்சங்கங்களுடனும் அவர் பேச்சு நடத்தினார்.
அன்னாரின் அரசியல் வரலாற்றில் ஜாம்பவானாகவும், எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனவாகவும் திகழ்ந்தார். அரசியல் மற்றுமன்றி அவரைச் சுற்றி இருப்பவர்களின் மனதைப் புரிந்துகொண்டு அன்பு காட்டுவதற்கு இவரிடம் எம் அன்னையே தோற்றுப்போய்விடுவார். அவரின் பேச்சைக் கேட்பதற்காகவே ஒரு கூட்டம் அவருக்கு இரசிகர்களாக இருந்தனர். அவர் பார்வையிலும், அன்பான சிரிப்பிலும்தான் இந்த மலையகக் கூட்டமே அவர் பின் இருந்தது. இவ்வாறு சூழழுக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் இசைவாக்கத்தன்மைதான் இன்று இவரின் சகாப்தங்களாக இருக்கின்றன.
இவர் 1986 ஆம் ஆண்டு இராஜலட்சுமியைத் திருமணம் செய்து கொண்டார். இவர் நாச்சியார் தொண்டமான், விஜயலக்ஷ்மி தொண்டமான், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஆகியோரின் பாசமிகு தந்தையாக திகழ்ந்தார்.
இவ்வாறு மக்களின் நாயகானாக மனங்களில் வலம் வந்த அமரர் ஆறுமுகன் தொண்டமான் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி கொழும்பு, பத்தரமுல்லையில் தனது வீட்டில் வைத்து எம்மை விட்டு இறைவனடி சேர்ந்தார். a
அன்னார் மரணமடையும்போது அவருக்கு வயது 56 ஆகும். அவர் இறக்கும்போது சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராகவும் இருந்து வந்தார்.
ஆண்டுகள் பல கடந்தாலும் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் எம் மக்களுக்காக ஆற்றிய சேவைகள் நினைவுகூரப்படும்.