12 ஆவது ஆசியக் கோப்பை ஹொக்கி போட்டி பீகார் மாநிலம், ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒருமுறை மோதின.
4 ஆவது நாளான நேற்று (01) கடைசிக் கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன. இதில் ‘ஏ’ பிரிவில் நடந்த இறுதி லீக்கில் முன்னாள் சம்பியனான இந்திய அணி, கஜகஸ்தானை சந்தித்தது. ஒரு தலைபட்சமாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணியினர் கோல் மழையால் இரசிகர்களை குஷிப்படுத்தினர். ஆனால் எதிரணியால் கடைசிவரை ஒரு பந்தைக் கூட வலைக்குள் திருப்ப முடியவில்லை.
முடிவில் இந்தியா 15 – 0 என்ற கோல் கணக்கில் கஜகஸ்தானை பந்தாடி தொடர்ந்து 3 ஆவது வெற்றியை (ஹாட்ரிக்) பெற்றது. இந்திய அணியில் அபிஷேக் (4), சுக்ஜீத் சிங் (3), ஜூக்ராஜ் சிங், ஹர்மன்பிரீத் சிங் (தலா 2), அமித் ரோஹிதாஸ், ரஜிந்தர் சிங், சஞ்சய், தில்பிரீத் சிங் (தலா 1) கோல் போட்டனர். இந்தியா 9 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அடுத்த சுற்றை எட்டியது.
இந்தப் போட்டி தொடரில் இன்று ஓய்வு நாளாகும். சூப்பர் 4 சுற்று ஆட்டம் நாளை (03) தொடங்குகிறது. சூப்பர்4 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென்கொரியாவுடன் மோதுகிறது.










