திருக்கோவில் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டமானது திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ .திரு.அதாம்பாவா அவர்களின் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கடந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதா என்பது பற்றி குறித்த தரப்பினர்களுடன் ஆராயப்பட்டத்துடன் தற்போது பிரதேசத்தில் காணப்படும் அபிவிருத்திகள் சமூக பிரச்சினைகள் பற்றியும் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு புதிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜானா.பாஷீத் மற்றும் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் சு.சசிகுமார் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக உதவிச்செயலாளர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், திருக்கோவில் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவரின் செயலாளர்கள், திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள திணைக்களங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், படையினர் மற்றும் கிராமசேவையாளர்கள், கிராம பொருளாதார அபிவிருத்தி உத்தியோத்தர்கள், விவசாய பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அவையாவன
ஆழ் கடல் மீனவர்களுக்கான எரிபொருள் தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கை.
காஞ்சிரன் குடா நெற்களஞ்சியசாலையினை இயங்குவதற்கான வேலை திட்டங்களை முன்னெடுத்தல்.
திருக்கோவில் பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் நெற்களஞ்சியசாலையினை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள்.
புதிய வீதிகள் அபிவிருத்தி, வீதிகளில் மின்குமிழ்கள் பொருத்துவதற்கான நடவடிக்கை.
பிரதேசத்தில் யானை வேலி அமைப்பதற்கான நடவடிக்கை.
திருக்கோவில் ஆதாரவைத்தியசாலையின் அபிவிருத்தி தேவைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள்.
சட்டவிரோத மதுபான விற்பனை நிலையங்கள், போதைபொருள் விற்பனைகள் போன்றவற்றுக்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளல்.
சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுத்தல்.
LRC காணிகளுக்கு விரைவில் ஆவணப்பத்திரங்கள் வழங்கல்.
கல்வி நடவடிக்கைகளூக்கு தேவையான நிதியினை பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கை என்பனவாகும்.














