பசறை அம்மணிவத்தை பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை பக்கம் இருந்து வந்து கொண்டிருந்த உந்துருளி ஒன்று பசறை அம்மணிவத்தை பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட சிறுவன் ஒருவன் மீது மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
சிறுவன் அயலவர்களினால் உடன் பசறை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், கொண்டு செல்லும் போது சிறுவனிடம் எதுவிதமான உணர்வுகளும் இல்லை எனவும் பசறை வைத்தியசாலையின் வைத்தியர்களின் பாரிய முயற்சியினால் சிறுவனின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இருப்பினும் சிறுவன் ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சிறுவனின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பசறை வைத்தியசாலையின் தலைமை அதிகாரி ஜானக கற்பித்த தெரிவித்தார்.
மேலும் உந்துருளியை செலுத்தி வந்த நபர் அம்மணிவத்தை கூட்டுறவு சங்கக் கடைக்கு முன்பாக சிறுவன் வீதியை கடக்க முற்பட்டபோதே மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும் உந்துருளியை செலுத்திய நபர் 23 வயதுடைய மெதவெலகம பகுதியை சேர்ந்த நபர் எனவும் அவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.














