இந்த நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயத் துறையின் மேம்பாட்டிலும், விரிவாக்கத்திலும் புதிய தொழில்நுட்ப முயற்சிகளை உட்புகுத்துவது காலத்தேவையானதாக மாறியிருக்கிறது. எமது விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகளை குறைத்துக்கொள்வதற்காக விவசாயம் சார் நவீன தொழில்நுட்ப இயந்திரங்களின் வருகையை நாம் வரவேற்க வேண்டியுள்ளது. நெல் அறுவடையின் கழிவுப்பொருளாகக் கிடைக்கும் வைக்கோலை கால்நடைத் தீவனம் உள்ளிட்ட ஏனைய தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு ஏதுவாக நவீன தொழில்நுட்பத் தரத்திலான இயந்திரம் ஒன்றின் அறிமுகம் விசாயத்துறையில் புதியதோர் மைல்கல்லாகவே அமையும் என நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம், SNP ரேடர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சபேசன் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற ‘சக்திமான் வைக்கோல் கட்டும் இயந்திரத்தின்’ அறிமுக நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களோடு சக்திமான் இந்திய நிறுவனத்தின் பணிப்பாளர், அந்நிறுவனத்தின் இலங்கைக்கான உதவிப் பணிப்பாளர், முகவர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலைப் பகுதியிலிருந்தும், அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பகுதியிலிருந்தும் வருகை தந்த வர்த்தகர்கள், விவசாயப் பெருமக்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதேச விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















