மன்னார் நகரசபையின் தலைவர் டானியல் வசந்தன் பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தி தனது நற்பெயருக்கும் அதே நேரம் அரச செயற்பாட்டுக்கும் களங்கம் விளைவித்துள்ளதாக கூறி மன்னார் பொலிஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை (8) மன்னார் நகரசபையின் முன்னாள் தலைவர் அன்ரனி டேவிட்சன் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மன்னார் நகர சபையின் புதிய தலைவர் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கடந்த காலங்களில் மன்னார் நகர சபையின் பண்டிகை கால கடைகள் ஒதுக்கீடு மற்றும் 5ஜி தொழில்நுட்ப சேவையை வழங்கும் செயற்பாட்டுக்கு அனுமதி வழங்க இலஞ்சம் பெற்றதாகவும் அவற்றில் ஊழல் இடம்பெற்றதாகவும் அது தொடர்பாக முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
குறித்த முறைப்பாட்டில் எந்த வித உண்மையும் இல்லை எனவும் பகிரங்க குத்தகை மூலம் இடம்பெற்ற விற்பனையில் எந்த ஒரு ஊழலும் இடம்பெறாத நிலையில் வேண்டும் என்று தங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் அதே நேரம் தனிப்பட்ட உள் நோக்கம் கருதி மன்னார் நகரசபை தலைவர் ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவித்துள்ளதாகவும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்படி முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக பல்வேறு அரச குழுக்கள் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய நிலையில் இதுவரை எந்த ஒரு குற்றச்சாட்டும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாத நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த ஊடக சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த மன்னார் நகரசபை புதிய தலைவருக்கும் தனக்கும் முன்னதாகவே தலைவர் தெரிவின் போது கருத்து வேறுபாடுகள் நிலவிய நிலையில் வேண்டும் என்று முன்னாள் நகரசபை தவிசாளர் தன் மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்களை காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்வைத்து வருகின்றமையின் அடிப்படையில் குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.












