யாழ். தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து இலங்கை இராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக் கட்டடத்துக்கு எதிராக நாளையும், நாளை மறுதினமும் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தப் போராட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நாளை (ஜூலை 9) மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை மற்றும் நாளை மறுதினம் (ஜூலை 10) பௌர்ணமி தினத்தன்று காலை 6:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை கவனயீர்ப்பு போராட்டமாக நடைபெறவுள்ளது.
விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் நோக்கத்தோடு நடைபெறும் இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்களும், பொது மக்களும் இணைந்து பங்கேற்கவுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் அனைத்து சமூகப் பிரதிநிதிகளும், குடிமக்களும் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்” என்றுள்ளது.










