“செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சி மூலம் வெளிப்பட்டுள்ள பேரவலம் எங்களை அதிர்ச்சிக்குட்படுத்தியுள்ளது என்பதைக் குறிப்பிட்டு எமது கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்” என யாழ்ப்பாணம் மாவட்ட சர்வ மத பேரவையின் கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “மனித வாழ்க்கை, எமது சமய விழுமியங்களின்படி, மாண்புமிக்கது. அதனை மதிப்புடன் நோக்குவதும் அறம், ஆன்மிகத்துடன் வாழ்க்கையை வாழவேண்டும் என்பதை இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து சமயம் மற்றும் பௌத்தம் தெளிவாக விளக்கியுள்ளது. அன்புடனும், நல்லெண்ணத்துடனும் வாழ வேண்டிய நாம், எம்மவரது எலும்புகளை செம்மணி உட்பட பல இடங்களிலும், மனித புதைகுழிகளிலிருந்து அகழ்ந்து எடுக்கிறோம் என்பது மிகமிக வேதனைக்குரியது.
இது கடவுளுக்கு எதிரான, சமய விழுமியங்களுக்கு எதிரான கொடுமையான செயல். இந்தக் கொடுமையுடன் தொடர்புபட்டவர்கள் அனைவரும் நீதியின் முன்கொண்டு வரப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மன்றின் 46/1 தீர்மானத்தின்படி, இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை காலம் தாழ்த்தாது விரைவாகச் சேகரிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், ‘இந்தப் புதைகுழிகளுக்குள் எமது உறவுகள் உள்ளனரா?’ எனும் கேள்வியை எழுப்புவதை சர்வதேச சமூகம், இலங்கையில் வாழ்வோர் அனைவரும் தெளிவாக செவிமடுத்து, அவர்களுக்கு நீதி கிடைக்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். எமக்குத் தெரியவந்துள்ள அனைத்து மனிதப் புதைகுழிகளை சர்வதேச கண்காணிப்புடன் பார்ப்பதுமின்றி அகழ்வாராய்ச்சி மிக வேகமாக நடைபெற வேண்டும்.
இனப்பிரச்சினை தீர்க்கப்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இந்த விடயத்தைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு எடுத்துச் செல்ல உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாம் முன்மொழிகிறோம்.
நீதியில்லாமல் அமைதியானது இலங்கையில் மட்டுமில்லை எங்கும் சாத்தியமில்லை என்பதை இலங்கைக்கும், உலகிற்கும் வலியுறுத்த விரும்புகிறோம். இனம், சமயம், மொழி, நிறம் எனும் அனைத்து வரையறைகளையும் கடந்து, இலங்கை உட்பட உலகெங்கும் பாதிக்கப்பட்டவர்கள் நிம்மதியாக வாழவும், எதிர்கால நம்பிக்கையை இன்று விதைக்கவும், கேவலமான மனித அழிப்பிலே ஈடுபட்டவர்களுடைய மனமாற்றம் தேவை என்பதையும் சமய விழுமியங்களின்படி வலியுறுத்துகின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.











