முல்லைத்தீவு மாவட்ட விவசாய விருதுகள் மற்றும் தொழிற்றுறை மேன்மை விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம்(16) மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ. உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் பி.ப 2.30 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.
குறித்த இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் திரு.நா.வேதநாயகன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து விருதுகளையும், சான்றிதழ்களையும் வழங்கிவைத்தார்.
மேலும் தனது பிரதம விருந்தினர் உரையில் ஆளுநர் குறிப்பிடுகையில் “முல்லைத்தீவு மாவட்ட பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் காணப்பட்டாலும் அவற்றை மேல் நிலைக்கு கொண்டு செல்வது மாவட்டத்தின் விவசாயிகள் மற்றும் தொழில் முயற்சியாளர்களில் கைகளிலே தங்கியுள்ளது. தொடர்ந்து முயற்சி செய்தால் அனைத்தையும் வெற்றிகொள்ள முடியும் எனத் தெரிவித்தார். இந்த விருது வழங்கும் விழாவினை மாவட்ட அரசாங்க அதிபர் மிகச் சிறப்பான முறையில் நடாத்தியிருந்ததுடன் இனி வருங் காலத்தில் விருது பெறுபவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரிக்க வேண்டும்” எனவும் தொடர்ந்து கருத்துரை வழங்கினார்.
இந் நிகழ்வில் ஆறு தொழில் முனைவோருக்கு தொழிற்றுறை மேன்மை விருதுகளும், ஐந்து விவசாயிகளுக்கு விவசாய மேன்மை விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் மாவட்டத்தில் சிறப்பாக செயற்படும் விவசாயிகள் மற்றும் தொழிற்றுறையினர்கள் 73 பேரை கௌரவித்து ஊக்கப்படுத்தி சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.ஆ.சிறி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண விவசாயத் தினைக்களத்தின் பணிப்பாளர் திருமதி.ச.செந்தில் குமரன், வடக்கு மாகாண தொழில்துறைத் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி.செ.வனஜா, வடக்கிற்கான கைத்தொழில் துறைகள் மன்றத்தின் தலைவர் திரு.ந.உருத்திரமூர்த்தி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன்(நிர்வாகம்), மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.ஜெயகாந்(காணி), மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்ட பிரதம கணக்காளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்கள், விவசாயிகள், தொழிற்றுறையினர் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.















