மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ள நிலையில் சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலை நடாத்துவதற்கு பொதுமக்கள் தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜஸ்ரினா முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு இந்துக் கல்லூரி பிரதான தேர்தல் அலுவலகமாக இயங்கவுள்ளதாகவும், அங்கிருந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 455,520 பேர் தகுதி பெற்றுள்ளதுடன் அவர்கள் வாக்களிப்பதற்காக 447 வாக்களிப்பு நிலையங்கள் ஆயுத்தப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வாக்களிப்பு நிலையங்களில் காலை 07.00 மணி தொடக்கம் மாலை 04.00 மணி வரையில் தமது வாக்கினை செலுத்தமுடியும். வாக்கு எண்ணும் பணிகள் 4.30மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. வாக்கெண்ணுவதற்காக 144 வாக்கெண்ணும் நிலையங்கள் ஆயுத்தப்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 383 தேர்தல் விதிமீறல்கள் முறையிடப்பட்டுள்ளது. எந்தவொரு வன்செயலும் இதுவரையில் அறிக்கையிடப்படவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக சுமார் 6000 அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருடன் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேர்தல்களை சுமுகமான முறையில் தேர்தலை நடாத்துவதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாளை காலை மட்டக்களப்பு இந்துக்கல்லூரியிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். நேற்று 03 ஆம் திகதி நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் தமது வாக்குரிமையினை பயன்படுத்தவேண்டும். சுமுகமான சுதந்திரமான தேர்தலொன்றை நடாத்துவதற்கு பொதுமக்கள் பூரண ஆதரவு வழங்கவேண்டும் என தெரிவித்தார்.