8-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் ‘டாப்-4’ இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்த தொடரில் இன்றிரவு ஜெய்ப்பூரில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கிறது.
முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் அணி அடுத்த 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் சறுக்கியது. முந்தைய ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை பந்தாடியது. 3 வெற்றி, 7 தோல்வி என 6 புள்ளிகளுடன் இருக்கும் ராஜஸ்தான் அணி கிட்டத்தட்ட அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை இழந்து விட்டது.
கடந்த ஆட்டத்தில் குஜராத் நிர்ணயித்த 210 ரன் இலக்கை 14 வயது வைபவ் சூர்யவன்ஷியின் மிரட்டலான சதம் (38 பந்தில் 101 ரன்) மற்றும் ஜெய்ஸ்வாலின் (70 ரன்) அரைசதத்தின் உதவியுடன் ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் எட்டிப்பிடித்து சாதனை படைத்தது.
ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் (426 ரன்), ரியான் பராக், துருவ் ஜூரெல் நன்றாக ஆடுகிறார்கள். முந்தைய ஆட்டத்தில் ‘இளம் சிங்கம்’ சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் விளாசி மைதானத்தை அதிர வைத்ததுடன், கிரிக்கெட் உலகை வியக்க வைத்தார். அவரது அதிரடி ஜாலம் தொடருமா? என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், ஹசரங்கா, தீக்ஷனா, சந்தீப் ஷர்மா நம்பிக்கை அளிக்கின்றனர்.
மும்பை அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று இருக்கிறது. முதல் 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்ற அந்த அணி கடைசி 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வாகை சூடி சரியான தருணத்தில் நல்ல நிலைக்கு திரும்பி வலுவாக இருக்கிறது.
மும்பை அணியின் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் (427 ரன்), ரையான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா, திலக் வர்மா சூப்பர் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சாஹர் கைகொடுக்கிறார்கள்.
இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தால் ராஜஸ்தான் அணி அதிகாரபூர்வமாக அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விடும். எனவே அந்த அணி உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் வெற்றிக்காக வரிந்து கட்டும். அதே நேரத்தில் தங்களது உத்வேகத்தை தொடர மும்பை அணி முழு திறனையும் வெளிப்படுத்த முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை. மொத்தத்தில் பலம் வாய்ந்த மும்பையின் சவாலை சமாளிக்க வேண்டும் என்றால் ராஜஸ்தான் எல்லா வகையிலும் அசத்த வேண்டியது அவசியமாகும்.
இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை 15 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 14 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. 2012-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மைதானத்தில் மும்பைக்கு எதிராக ராஜஸ்தான் தோற்றதில்லை. அந்த அணிக்கு எதிராக இங்கு நடந்த கடைசி 5 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, நிதிஷ் ராணா, ரியான் பராக் (கேப்டன்), துருவ் ஜூரெல், ஹெட்மயர், சுபம் துபே, ஹசரங்கா, ஜோப்ரா ஆர்ச்சர், தீக்ஷனா, சந்தீப் ஷர்மா, யுத்விர் சிங்.
மும்பை: ரோகித் சர்மா, ரையான் ரிக்கெல்டன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, வில் ஜாக்ஸ், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், கார்பின் பாஷ் அல்லது மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, கரண் ஷர்மா.