அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணங்களையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவரது பாரியார் பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவும் 2023ஆம் ஆண்டில், அரச செலவில் இலண்டன் சென்றனர் என்று வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவையாகும்.
2023ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்று சந்தர்ப்பங்களில் இலண்டன் சென்றுள்ளார். மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்குப்பற்றுவதற்காக 2023 மே மாதம் 9ஆம் திகதி இலண்டனுக்கான முதலாவது பயணத்தை அவர் மேற்கொண்டிருந்தார்.
பாரிஸ் மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் சர்வதேச ஜனநாயக சங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான அமர்வில் கலந்துகொள்வதற்காக இரண்டாவது தடவையாக அவர் இலண்டன் சென்றிருந்தார்.
அதனையடுத்து ஹவானாவில் நகரத்தில் இடம்பெற்ற ஜி 77 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டதன் பின்னர், நியூயோர்க்குக்கும் பின்னர் இலண்டனுக்கும் அவர் பயணித்திருந்தார்.
மைத்ரி விக்ரமசிங்கவுக்குப் பிரித்தானியாவின் வல்வர்ஹெப்டன் பல்கலைக்கழகத்தினால் பேராசிரியர் பதவி வழங்கும் நிகழ்வு அந்தச் சந்தர்ப்பத்தில் இடம்பெற்றது.
அந்த நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், நியூயோர்க்குக்குச் சென்று வரும் வழியில் அந்த நிகழ்வில் அவர் பங்கேற்றிருந்தார்.
இந்தப் பயணங்களின்போது அவர் பல அரச தலைவர்களைச் சந்தித்திருந்ததுடன், பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க சர்வதேச மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்கள் மற்றும் மாநாடுகளிலும் பங்கேற்றிருந்தார்.