நாடளாவிய ரீதியில் தாதியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், யாழ். போதனா வைத்தியசாலை தாதியர்களும் இன்று (17) போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பாதீட்டில் தாதியர்களுக்கு ஏற்பட்டுள்ள சம்பளப் பிரச்சினையை தீர்க்ககோரி இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்தப் போராட்டமானது இன்று காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை இடம்பெற்றுள்ள நிலையில், முற்பகல் 11:30 மணி முதல் 12.30 மணி வரையான காலப் பகுதியில் தாதியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இது குறித்து யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் சங்கத் தலைவர் தர்மகுலசிங்கம் பாலுமகேந்திரா கருத்து தெரிவிக்கையில்,
கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி தாதியர்கள் நாடளாவிய ரீதியில் ஒரு மணித்தியால அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், சுகாதார அமைச்சு பாதீட்டில் ஏற்பட்டுள்ள சம்பளப் பிரச்சினைக்கு தீர்வை வழங்காமையால் மார்ச் மாதம் 6ஆம் திகதி பணி புறக்கணிப்பு செய்வதற்கு அரச தாதியர் சங்கம் தீர்மானித்திருந்தது.
இருப்பினும் மார்ச் 5ஆம் திகதி அரச தாதியர் சங்கத்துடன் சுகாதார அமைச்சு ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டது. இதன்போது, நிதி அமைச்சுடன் கலந்துரையாடி தீர்வு வழங்குவதாக தெரிவித்து கால அவகாசம் கோரப்பட்டது. இந்நிலையில் வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் தீர்வு வழங்கப்படவில்லை. ஆகையால் இன்றையதினம் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என்றார்.


