பொன்னாலை – பருத்தித்துறை கரையோர பிரதான வீதி அமைக்கும் பணியினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (13) இடம்பெற்றது. வல்வெட்டித்துறை பகுதியில் வீதி அமைக்கும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மாவட்டச் செயலாளர் ம. பிரதீபன் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் இறுதியில் அமைச்சர் வெளியேறிச் செல்லும் போது அங்கிருந்த இளைஞர்கள் சிலர் அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறித்த வீதி கடந்த ஆட்சிக்காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதி, நாடு வங்குறோத்து காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இப்போது நீங்கள் உங்கள் கட்சிக்காரர்களை கூட்டி வைத்து புதிதாக போடுவது போல காண்பிக்கிறீர்கள். வீதி பணி ஆரம்பிப்பு என்று வந்து ஏதும் செய்யாமல் உங்கள் பிரசார நடவடிக்கையினை முன்னெடுத்துவிட்டுச் செல்கிறீர்கள் என தர்க்கத்தில் ஈடுபட்டனர்.