“பட்டலந்த விவகாரம் போன்று எத்தனை ஆயிரமாயிரம் சம்பவங்கள் எமது தமிழ் மண்ணிலே நடந்திருக்கின்றன. இந்தச் சம்பவங்கள் உங்களுக்குத் தெரியவில்லையா? இதற்கு என்ன நடவடிக்கையை நீங்கள் எடுக்கப் போகின்றீர்கள்?” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், நல்லூரடியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இப்போது பலரும் பேசி வருகின்ற பட்டலந்த விவகாரம் அந்தக் காலத்திலேயே மிகப் பெரியளவில் பேசப்பட்டது. அதாவது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இளமைக் காலத்திலே அதற்கும் அவருக்கும் தொடர்பு இருந்த்தாகவே பேசப்பட்டு வந்தது.
அந்த ஆணைக்குழு அறிக்கை கூட இவ்வாறான விடயங்களை உள்ளடக்கியதாகவும் இதனை உறுதிப்படுத்தியும் இருக்கின்றது.
ஆனபடியால் அவர்களைப் பொறுத்தவரையில் இது காலங்கடந்தது என்றாலும் அதனைப் பகிரங்கப்படுத்தி உண்மையை வெளிக்கொண்டு வந்து அரசு அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது சரி என்றே நான் நினைக்கின்றேன்.
உண்மையைச் சொல்லப் போனால் இந்தப் பட்டலந்த படு கொ லை விவகாரம் என்பது அந்த நாட்டிலே இருக்கின்ற அந்த மக்களுக்காக அங்க செய்கின்ற விடயம்.
ஆனால், தமிழர்களுக்கு என்ன நடந்தாலும் அது சரி என்று நியாயப்படுத்துகின்ற வேலையைத்தான் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசுகள் செய்து கொண்டு வந்திருக்கின்றன.
அதுதான் இவர்களது பொலிசியாகவும் அதாவது அவர்களது நிலைப்பாடாகவும் இருக்கின்றது. ஏனெனில் காட்சிகள் மாறுகின்றதே ஒழிய ஆட்கள் மாறவில்லலை. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களது சிந்தனையில் மாற்றங்கள் ஏற்படாது.
இந்தப் பட்டலந்த விவகாரம் சம்பந்தமாக ஆட்சியாளர்களிடம் நாங்கள் ஏதும் கோரிக்கை வைக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. அது அவர்களே சண்டையிட்டுக் கொள்வார்கள். அப்படித்தான் இப்போது நடக்கின்றது. இதனைப் பற்றி சிங்கள அரசியல்வாதிகள் பேசிக்கொள்ளட்டும்.
தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவரும் சேர்ந்து இவரும் சேர்ந்து என அவர்கள் எல்லோருமாக இப்படி எத்தனை பட்டலந்தவை எமது மண்ணிலே நடத்தியிருக்கின்றார்கள்.
ஒரு பட்டலந்த பற்றி இப்போது அங்கு அவர்கள் பேசுகின்றார்கள். ஆனால், இப்படி எத்தனை ஆயிரம் பட்டலந்த கொடுமைகள் இங்கு நடந்திருக்கின்றன.
இங்கு எவ்வளவு பேர் கொடுமைப்படுத்தப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் கொல்லப்பட்டும் இருக்கின்றார்கள். அவை எல்லாவற்றுக்கும் விசாரணை நடத்தப்படுமா என்றால் இல்லை.
ஆக பட்டலந்த போல் பற்பல சம்பவங்கள் எங்களுக்கு எதிராகச் செய்யப்பட்டுள்ளமைக்கு நீங்கள் என்ன நடவடிக்கையை எடுக்கப் போகின்றீர்கள் என்றும், உங்களால் ஏன் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் பல்வேறு கேள்விகளை நாங்கள் எழுப்பலாம். அதைச் செய்வோம்.” – என்றார்.