வடக்கு – கிழக்கு மாகணத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களாக வந்த எங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய தேவைகளை கூட எங்களுக்கூடாக நிறைவேற்ற வேண்டிய கட்டத்தில் உள்ளார்கள். அவர்கள் அங்கு கூலியால் போல் தான் இருக்கிறார்கள். அவர்கள் பொம்மைகள் போல தான் உள்ளார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா, குருமன்காடு, காளிகோவில் வீதியில் பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தை இன்று (09.03) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டம் மட்டுமின்றி வடக்கு – கிழக்கில் பெரும்பாலான சபைகளை எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இந்த தேர்தல் முறை என்பது சிக்கலான முறை. நாங்கள் வடக்கு மாகாணத்தில் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் புதுக்குடியிருப்பு, பூநகரி ஆகிய பிரதேச சபைகளை மாத்திரே ஒரு கட்சியாக அந்த நேரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக ஆட்சி செய்தோம்.
வவுனியாவில் எல்லா சபைகளிலும் பெரும்பான்மையான வட்டாரங்களை கைபபற்றி இருந்தாலும் கூட நாங்கள் எதிர்கட்சியாகவே இருக்க வேண்டி இருந்தது. அதற்கு இந்த உள்ளூராட்சி தேர்தல் முறைமை காரணம்.
அதனால் தான் கடந்த உள்ளூராட்சி மன்றத்திற்குரிய வேட்புமனுக்கள் செய்த போது கட்சிக்குள் முடிவெடுத்தோம். தனித் தனிக் கட்சியாக போட்டியிட்டு ஒன்று சேர்ந்து ஆட்சி அமைப்போம் என்று. ஆனால் அதன் பின் நடந்த முடிவு உங்களுக்கு தெரியும்.
இம்முறை எமக்கு சவாலான உள்ளூராட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அதிக வாக்குளைப் பெற்று தனிப் பெரும் கட்சியாக ஆட்சி அமைத்துள்ள ஜனாதிபதியின் கட்சி வடக்கு – கிழக்கில் போட்டியிட வற்துள்ளார்கள். கடந்த உள்ளூராட்சி தேர்தலில் அவர்கள் வடக்கு – கிழக்கில் போட்டியிடவில்லை.
எனவே, எமது வேட்பாளர்களின் செயற்பாடுகள் அதில் தாக்கம் செலுத்தும். அரசியல் ரீதியாக கொள்கை, ரீதயாக வேறுபாடுகள் இருந்தாலும் கூட ஒவ்வொரு வட்டாரத்திலும் போட்டியிடும் வேட்பாளர் தான் கட்சியின் வெற்றியை தீர்மானிக்கப் போகின்றார். இதனால் நாம் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம்.
வவுனியா மாவட்டம் மிகவும் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு மாவட்டம். எமது மாவட்டத்தில் இனப் பரம்பலை மாற்றக் கூடிய வகையில் பல பிரச்சனைகள இடம்பெறுகின்றன. எங்களது மக்களது காணிகள் அபகரிக்கப்படுகிறது. பல திணைக்களங்கள் எமது காணிகளை கையகப்படுத்துகிறது. எமது இடம்பெயர்ந்த மக்கள் குடியேற முடியாத நிலை இருகிறது. வன்னி தேர்தல் மாவட்டத்திலும் இருப்பை காப்பாற்ற வேண்டிய நிலையில் இருந்து வருகின்றோம்.
அந்த வகையில் பாராளுமன்றத்திலும் நானும், ரவிகரனும் குரல் கொடுத்து வருகின்றோம். அமைச்சர்களோடு பழகி வருகின்றோம். எமது மக்கள் சார்ந்த செயற்பாடுகளுக்காக அவர்களுடன் சண்டை பிடிக்கவில்லை. தவறுகள கூறுகின்றோம். பல வாக்குறுதிகளை தந்துள்ளார்கள். சில நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆனால், வடக்கு – கிழக்கு மாகணத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களாக வந்த எங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய தேவைகளை கூட எங்களுக்கூடாக நிறைவேற்ற வேண்டிய கட்டத்தில் உள்ளார்கள். அது ஒரு பரிதாபமான விடயம். அவர்களுக்கான குரல் அங்கு ஒலிப்பதற்கு இடமில்லை. அவர்கள் அங்கு கூலியால் போல் தான் இருக்கிறார்கள்.
வடக்கு – கிழக்கு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பொம்மைகள் போல தான் உள்ளார்கள். அது தான் ஜதார்தம். உண்மை. அண்மையில் கருத்து வெளியிட்ட ஊடகம் ஒன்று தரைப்பட்டியில் வடக்கு கிழக்கு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கீழ் மட்டத்தில் இருக்கிறார்கள் எனக் காட்டியது. எவ்வாறு இருந்தாலும் எமக்கு சவால் மிக்கது இந்த தேர்தல். அதை மனதில் வைத்து செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.