வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண தைப்பொங்கல் விழா இன்று காலை 9:00 மணியளவில் மாதகல் நுணசை முருகன் ஆலய வளாகத்தில் அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது .
முதன்மை நிகழ்வாக ஆலய வளாக வயலில் இருந்து சடங்காசார முறைப்படி புதிதெடுத்து அதனை ஆலயத்திற்கு எடுத்து வந்து பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.
தொடர்ந்து ஆலய முன்றலில் எடுத்து வந்த நெல்லை உரலில் இடித்து பிடைத்து பின்னர் வடமாகாண ஆளுநர் சம்பிரதாய பூர்வமாக பொங்கலை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து முன்றலில் அமைக்கப்பட்டிருந்த 51 பொங்கல் பானைகளில் பொங்கல் இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து விருந்தினர்கள் பல்வேறுபட்ட கலை நிகழ்வுகளுடன் அழைத்து வரப்பட்டு பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட கலையரங்கில் கலை நிகழ்வுகள் இடம்பெற்று கலை மன்றங்களுக்கு இசைக்கருவிகளும் வழங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம்பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில் வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றது.
இதன் பொழுது பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், சிறப்பு விருந்தினராக பிரதம செயலாளர் இளங்கோவனும், கௌரவ விருந்தினராக சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் சுபாஜினி மதியழகன் மற்றும் வடமாகாண கலாச்சார அலுவல்கள் பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர், கலாசார உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


