கைபேசி மற்றும் மடிக்கணினியின் கடவுச்சொற்களை சுரேஷ் சலே, வழங்க வேண்டும் என விசாரணை அதிகாரிகள் கட்டாயப்படுத்தக் கூடாது என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அதற்கான நான்கு முக்கிய காரணங்களையும் அவர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், சுரேஷ் சலேவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தாம் மதித்தாலும், அதனுடன் உடன்படவில்லை என்றும், அவரது சட்டத்தரணிகள் குழு இதற்கு எதிராக மேன்முறையீடு செய்யும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கையின் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின்படி, தனக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு உதவுமாறு எந்தவொரு சந்தேகநபரையும் கட்டாயப்படுத்த முடியாது.
சந்தேகநபர் ஒருவர் தனக்கு எதிரான விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டிய அவசியமில்லை என்பதுடன், அவர் விரும்பினால் மௌனமாக இருப்பதற்கான முழு உரிமை அவருக்கு உண்டு.
விசாரணை அதிகாரிகளோ அல்லது அரச பிரதிநிதிகளோ கடவுச்சொற்களை வழங்குமாறு சந்தேகநபர் மீது தேவையற்ற அழுத்தங்களையோ, அச்சுறுத்தல்களையோ அல்லது தூண்டுதல்களையோ பிரயோகிக்கக் கூடாது.
அவ்வாறு செய்வது சட்டவிரோதமான செல்வாக்குச் செலுத்துகையாக மாறும். தற்போதைய அரச பிரதிநிதிகளின் பொதுவெளிக் கூற்றுகள் அத்தகைய அழுத்தங்களை உருவாக்குவதாக அமைந்துள்ளன.
சுரேஷ் சலே தனது 38 ஆண்டுகால புலனாய்வுத் துறை சேவையில் உருவாக்கிய மிக உணர்வுபூர்வமான மற்றும் இரகசியமான தகவல் மூலங்கள் தொடர்பான விவரங்கள் அந்த மின்னணு சாதனங்களில் இருக்கலாம்.
தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் ‘ஹனி ட்ராப்ஸ்’ உள்ளிட்ட பல்வேறு உத்திகள் மூலம் தகவல்களை வழங்கியவர்களின் விவரங்கள் இதில் அடங்கும்.
இந்தக் கடவுச்சொற்களை வெளிப்படுத்துவதன் மூலம், நாட்டின் பாதுகாப்புக்காகத் தங்கள் உயிரைப் பணயம் வைத்துத் தகவல் வழங்கியவர்களின் உயிருக்குக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும்.
கடந்த 2002ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘மில்லினியம் சிட்டி’விவகாரத்தின் போது, நாட்டின் இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் மற்றும் அதிகாரிகள் பற்றிய விவரங்கள் வெளியில் கசிந்ததால் ஏற்பட்ட கசப்பான விளைவுகளை நாடு அறிந்தது.
இதனால் பல புலனாய்வு அதிகாரிகளும் தகவல் வழங்குநர்களும் படுகொலை செய்யப்பட்டதுடன், நாட்டின் ஒட்டுமொத்த புலனாய்வு வலையமைப்பும் சீர்குலைந்தது. அத்தகையதொரு ஆபத்தான நிலைமை மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது.
இந்தக் காரணங்களின் அடிப்படையில், சுரேஷ் சலே தனது கடவுச்சொற்களை வழங்குவதை எதிர்ப்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன. எனினும் இந்த நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான சவால்கள் முறையான சட்டச் செயல்முறைகளின் ஊடாகவே முன்னெடுக்கப்பட வேண்டும்.” – என்றார்.










