வடமாகாணம் இந்தியாவின் மாநிலம் அல்ல.!

இலங்கையை அல்லது வடபகுதியை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாக வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் செயலாளர் முகமட் ஆலம் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவுக்கும் இலங்கைக்கும், அதாவது sea of Sri Lanka என்று சொல்லப்படுகின்ற கடற்பரப்பை ஊடறுத்து ஒரு கடல் வழிப் பாதையை உருவாக்கி அதை இந்தியாவிடம் தாரை வார்க்கக் கூடிய ஒரு செயற்பாட்டை ஊடக வாயிலாக அறிகின்றோம். 

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலே பாலம் அமைப்பது தொடர்பாக இலங்கை ஜனாதிபதி அவர்களுக்கும் இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கும் இடையிலே ஒரு பேச்சுவார்த்தை இடம்பெற்று, அந்த தீர்மானங்களும் எட்டப்பட்டதாக ஊடகங்கள் வாயிலாக அறியக் கூடியதாக இருக்கின்றது.

உண்மையிலேயே இந்த இலங்கை இந்திய மீனவர் பிரச்சினையை கையாளுவதினை இலங்கை ஒட்டுமொத்தமாக கைவிட்ட நிலையில் இந்தியாவின் ஆதிக்கத்தை இலங்கை கடற்பரப்பிற்குள், அதிலும் குறிப்பாக வடக்கு கடற்பரப்பிற்குள் நிலைநாட்டி வருகின்றது.

கிட்டத்தட்ட 25, 30 வருடங்களாக இந்த கடலில் நாங்கள் இருக்கின்றோம், இந்தக் கடல் எங்களது கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்பதை காட்டிக் கொள்வதற்காகவே அவர்கள் இந்த படகுகளை இலங்கை கடற்பரப்புக்குள் அனுப்புகின்றார்கள். 

அந்த விடயத்தை வைத்து இலங்கை கடற்பரப்பு இந்தியாவுக்கு சொந்தமானது என்று வாதிட பார்க்கின்றார்கள். அதில் ஒரு அங்கமாக தமிழக படகுகள் இங்கே வருவது, அவர்களுக்கான விடுதலையை வலியுறுத்தி கௌரவ ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதுவது, அதை இலங்கை அரசு சாதகமாக பரிசீலித்து இந்திய மீனவர்களை விடுவிப்பது என்பதன் தொடர்கதையின் அடுத்த கட்டம் தான் இந்த கடல் வழிப்பாதை.

பாதையை அமைப்பது அதனை கையாள்வது யார் என்று கேள்விக்கு அப்பால், முற்றுமுழுதாக இந்திய நலன் சார்ந்ததாகத்தான் அது இருக்கப் போகின்றது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் போடப்படுகின்ற அந்த பாலம் வடமாகாணத்தை இந்தியாவின் ஒரு மாநிலமாக ஆக்கப் போகின்றது என்பது மாத்திரம் உண்மை. இது எதிர்காலத்தில் நாங்கள் அல்லது எங்களது சந்ததியினர் உணர்ந்து கொள்வார்கள் என்பதை கூறிக் கொள்கின்றேன்.

எனவே இலங்கை இன்னும் இதே நிலைப்பாட்டில் இருக்குமாக இருந்தால் இந்த நாடு துண்டு துண்டாக உடைவதையும், இந்த நாடு துண்டு துண்டாக ஒவ்வொரு நாட்டுக்கு பங்குகளாக பிரிக்கப்படுவதையும் யாராலும் தடுக்க முடியாமல் போய்விடும் எனவே இனிமேலாவது இருக்கின்ற புத்திஜீவிகள் அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

Comments are closed.