சாந்தன் மிக விரைவில் இலங்கை வருவார், இது தேசிய நல்லிணக்கத்தின் ஊடகவே சாத்தியமாகிறது – EPDP பேச்சாளர் ஐ.சிறரங்கேஸ்வரன்.!

0

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன் என்று அழைக்கப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராசா மிக விரைவில் இலங்கை வருவார் என்றும் இது தேசிய நல்லிணக்கத்தின் ஊடாகவே சாத்தியமாகிறது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பேச்சாளர் ஐ.சிறிரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்தாவது,

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியினுடைய கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இந்திய உச்ச நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள
சாந்தன் என்று அழைக்கப்படுகின்ற தில்லையம்பலம் சுதேந்திரராசா அவர்கள் இலங்கை வருவது தொடர்பாக ஊடகங்களிலே பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன.

உண்மையில் அவரை இலங்கைக்கு வரவழைப்பதற்கு, அவரது பெற்றோர் எங்களுடைய கட்சியினுடைய தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களை அணுகி தங்களுடைய மகனை இலங்கைக்கு அழைத்து வருவதில் உள்ள தடைகளை இனங்கண்டு, பாதுகாப்புத் தரப்பினது அனுமதிகளை பெற்றுத்தருமாறு கோரியிருந்திருக்கிறார்கள்.

உண்மையிலே எங்களுடைய கட்சியின் தலைவர் அவர்கள் தேசிய நல்லிணக்கத்தை தென்னிலங்கை தரப்புக்களுடன் வளர்த்ததன் அல்லது நட்பை வளர்த்ததன் ஊடாக அதனை சாத்தியப்படுத்தக் கூடியதான சமிக்ஞைகள் தெரிகின்றன.

சாந்தனுடைய தாயார் 77 வயதுடைய தில்லையம்பலம் மகேஸ்வரி அம்மையார் தன்னுடைய மகனை முதுமை காரணமாக இந்தியாவிற்கு சென்று பார்க்க முடியாதுள்ளதாகவும், மனிதாபிமான அடிப்படையில் தனது மகனை இலங்கைக்கு அழைத்துவர தங்களாலான உதவிகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

அந்த வகையில் தென்னிலங்கையில் அரசுடன் அமைச்சர் அவர்கள் தொடர்பு கொண்டதன் ஊடாக அவருடைய வருகை விரைவுபடுத்தப்பட்டிருக்கின்றது.

நாங்கள் அறிக்கை விடுவதன் ஊடாக அழுத்தங்களைப் பிரயோகிக்கின்ற பலமோ அல்லது பேரம் பேசுகின்ற பலமோ தமிழர் தரப்பில் இல்லாத சூழல் இருக்கின்றது. மாறாக தேசிய நல்லிணக்கம் தான் இவ்வாறான வாய்ப்புகளை சந்தர்ப்பங்களை உருவாக்கித் தந்திருக்கிறது.

ஆகவே கடந்த நல்லாட்சி அரசு காலத்திலே பல தமிழ் இளைஞர்கள் தமிழ் அரசியல் கைதிகளாக சிறைகளிலே நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, நல்லாட்சி அரசைக் கொண்டுவந்தவர்களும் நல்லாட்சி அரசினுடைய காவலர்களாக செயற்பட்டவர்களும் அவர்களை விடுவிப்பதிலே அல்லது அவர்களது வழக்குகளை இரத்துச்செய்து பொது மன்னிப்பு அடிப்படையில் அவர்களது பெற்றோர்களுடன் இணைப்பதிலே எவ்வளவு அக்கறை காட்டினார்கள் என்பது உலகறியும்.

ஆனால் நாங்கள் தென்னிலங்கையுடன் இருக்கின்ற தேசிய நல்லிணக்கம் காரணமாக றாஜீவ் காந்தியினுடைய கொலை வழக்கிலே குற்றஞ்சாட்டப்பட்டு இந்திய உச்ச நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டிருக்கும் சாந்தனை இலங்கையிலுள்ள அவரது குடும்பத்துடன் இணைப்பதற்க்கான சகல விதமான செயற்பாடுகளையும் முன்னெடுத்திருக்கின்றோம்.- என்றார்

Leave A Reply

Your email address will not be published.