ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமை சிங்களவர்களிடம் தாரை வார்க்கப்பட்ட தினம் – சபா குகதாஸ்.!

0

ரெலோவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் அவர்கள் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பெப்ரவரி 4ம் திகதி ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரை தங்களது சுயநிர்ணய உரிமையை பிரித்தானியர்கள் பறித்து சிங்களவர்களுக்கு தாரைவார்த்த தினமாகவே பார்க்கின்றனர் அத்துடன் தங்களின் சுதந்திரம் பறிபோன கரி நாளாக அதனைப் பிரகடனப்படுத்தியுள்ளனர்.

பிரித்தானிய காலனித்துவம் இலங்கைக்கு வரும்போது இரண்டு தேசங்களில் சிங்களவரும் தமிழர்களும் தனித்தனியாக தங்களது சுயநிர்ணய உரிமையுடன் தன்னாட்சியை நடாத்தி கௌரவமாக வாழ்ந்தனர். ஆனால் 1815ம் ஆண்டு கண்டி இராச்சியத்தை பிரித்தானியர் கைப்பற்றிய பின்னர் பல இராச்சியங்களாக இருந்த நாட்டை ஒற்றையாட்சி அரசியலமைப்பான கோல்புறூக் யாப்பை 1833 இல் நடைமுறைக்கு கொண்டு வந்து இலங்கையை ஒற்றையாட்சி நாடாக பிரகடனப்படுத்தினர்.

கோல்புறூக் யாப்பில் இருந்து சோல்பரி அரசியலமைப்பு வரை ஒற்றையாட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்திய பிரித்தானியர், சுதந்திரம் என்ற பெயரில் பல இன மக்கள் வாழும் நாட்டை தங்களுடைய பூகோள நலனுக்காக ஒற்றையாட்சி முறைக்குள் ஒரு இனத்திடம் ஆட்சியை ஒப்படைத்தமை ஏனைய இனங்கள் அடக்குமுறைக்கு உள்ளாவதற்கு வழிகோலியது. இதனால் தமது இறைமையை இழந்த இனமாக ஈழத் தமிழர்கள் மாறியதுடன் சுதந்திரத்தைப் பறிகொடுத்தவர்களாகவும் அவலப்படுகின்றனர். இதனால் தமிழர்களுக்கு பெப்ரவரி 4ம் திகதி சுதந்திர தினம் என்பது கரி நாளாகவே அமைந்து விட்டது – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.