சிலாபம் கடற்பரப்பில் மீன்பிடிப் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 41 வயதுடைய மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிலாபம், ரிதீவெல்ல பகுதியைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார் என்றும், அவரே விபத்துக்குள்ளான படகின் உரிமையாளர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
உயிரிழந்த மீனவரும் மற்றொரு மீனவரும் நேற்று வியாழக்கிழமை மாலை மீன்பிடி நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை அவர்கள் மீண்டும் கரை திரும்பிக் கொண்டிருந்த போதே, கடல் அலையின் சீற்றம் காரணமாக இவர்களது படகு திடீரெனக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, படகில் இருந்த இரண்டாவது மீனவர் அந்தப் பகுதியால் பயணித்த மற்றொரு மீன்பிடிப் படகின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். எனினும், கடலில் மூழ்கிய படகின் உரிமையாளரான மீனவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், மாரவில கடற்பரப்புக்கு அருகில் வைத்து மற்றுமொரு மீன்பிடிப் படகினரால் அவரது சடலம் மீட்கப்பட்டு, சிலாபம் களப்புப் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
பலியானவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காகச் சிலாபம் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சிலாபம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










